Saturday, March 17, 2018

26-புலால் மறுத்தல்



                          26-புலால் மறுத்தல்

251-தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
     எங்ஙனம் ஆளும் அருள்.

தன்னுடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்ககிக் கொள்பவர் எப்படி கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்?-இது தேவை.
                              
252-பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
      ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.

பொருளை பாதுகாக்க தவறியவர்களுக்கு பொருளுடையார் எனும் சிறப்பு இல்லை,அதைப்போல புலால் உண்பவர்க்கும் அருள் உடையார் எனும் சிறப்பு இல்லை.இது தேவை.

253-படைகொண்டார் நெஞ்சம்போல்நன்றூக்காதொன்றன்
      உடல்சுவை யுண்டார் மனம்.

படைக்கருவியை பயன்படுத்துவோர் நெஞ்சமும் ஓர் உயிரின் உடலை சுவைத்து உண்பவரின் நெஞ்சமும் கருணை உள்ளம் கொண்டதாக இருக்காது.இது தேவை.

254-அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
      பொருளல்ல தவ்வூன் தினல்.

கொல்லாமையே கருணையாகும்,மாமிசம் உண்பது அறம் ஆகாது.இந்த குறள்  தேவை
(அறம் என்பது கொல்லாமை மட்டுமே அல்ல,அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்.மாமிசம் உண்ணுதல் போன்றவைகள் உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் பெரும்பாலான பழக்கமாகிறது.

மனித  நாகரிகத்தின் உச்ச கட்டம் என்பது மிருக வதை கூடாது என்பது மட்டுமல்ல,மனிதன் மனிதனைக் கொல்வதையும் நிறுத்த வேண்டும் .ஆனால் இன்று உலக நடப்புகளே வேறாக உள்ளது,
ஆன்மிகத்தில் மக்களின் நம்பிக்கை மத வெறியாக மாறி மனிதனை மனிதன் கொலை செய்வதே(போர் புரிவது) நாகரிகம்(அறம்?) ஆகிவிட்டது. அறமும் அன்பும் ஏடுகளில் தான் உள்ளது.உத்தமர்கள் என சொல்லித்திரியும் கடவுளின் இடைத்தரகர்களின் உதடுகளில் மட்டுமே உலாவருகிறது.
                             
255-உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
      அண்ணாத்தல் செய்யா தளறு.

புலால் உண்ணாதவர்கள் இருப்பதால் தான் பல உயிர்கள் உலகில் உயிர் வாழ்கின்றன.ஊன் உண்டு வாழ்பவன் கொலை பாவத்துக்கு ஆளாவான்.இது தேவை.

256-தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
      விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

புலால் உண்பவர் என உலகில் எவரும் இல்லை எனில்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ளமாட்டார்.இது தேவை.

257-உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றல்
      புண்ண துணர்வார்ப் பெறின்.

புலால் என்பது வேறு ஒரு உயிரின் உடல் புண் என உணர்வாரே யானால் அப்புலாலை உண்ணமாட்டார்.இது தேவை.

258-செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
      உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

தெளிந்த உள்ளம் படைத்தோர் ஒரு உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.இது தேவை

259-அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
      உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நெய்யை தீயிட்டு வேள்விகள் ஆயிரம் செய்வதை விட,உண்பதற்கு ஒரு உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.இது தேவை.

260-கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
       எல்லா உயிருந் தொழும்.

புலால் உண்ணாதவர்களையும் அதற்காக உயிர்களை கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வாழ்த்தும்.இது தேவை. 

புலால் மறுத்தல்அதிகாரத்தின் பத்து குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தவைகள் ஆகும்.
    ***************************************************************************
நான் எந்த மனிதனுக்கும் எதிரானவன் கிடையாது! மூட நம்பிக்கைக்கு மட்டுமே எதிரானவன்சொன்னவர் கல்புர்கி,சாகித்திய அகாடெமி விருது பெற்ற கர்நாடக சுய சிந்தனையாளர்.இது போன்ற சிந்தனை கொண்டவர்களை சுட்டுக்கொல்கிறது மதவாத அமைப்பு!
சகிப்புத் தன்மையும்,சுய சிந்தனையும் இன்றி,மனித நேயமற்றவர்களாகவே வாழ்கின்றனர், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்! பகுத்தறிவாளன் கடவுளை விமரிசித்தால் பக்தனுக்கு ஏன் கோவம் வருகிறது?,கடவுள் உண்டென்றால் கடவுளுக்குத்தானே கோவம் வரவேண்டும்?கடவுள் என்னவோ இவனுடைய ரத்த பந்தம் கொண்ட சொந்தக்காரன் போல...!
                      **************************************
                     

No comments: