Wednesday, December 18, 2019

இ.பி-31


          141-எங்களுக்கு நீங்கள் வேண்டாம்

பணியில் சேர்ந்த உடன்,கிடங்கின் பணிகளை கிடங்கு ஊழியர்களுக்கு பணி பங்கீடு போட்டு அவரவர்களை பணிக்கு பொறுப்பாக்கினேன்.சுமை தூக்கும் ஊழியர்களுக்கு என் செயல்பாடுகள் பிடிக்க வில்லை.
பொது விநியோகத்திலும்,சத்துணவு இயக்கத்திலும் என் கண்ணெதிரே நடக்கும் முறைகேடுகளை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
கிடங்கு சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வேலையற்றவர்கள் பிழைக்க வேண்டி பொது விநியோகம் மற்றும் சத்துணவு லாரிகளை மடக்கி என் கண்ணெதிரே மூட்டைகளை கீழே தள்ளிவிடுவர்.
எனக்கு முன் பணி செய்த அதிகாரிகள் உள்ளூர் ரவுடிகளை அடக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை. இதன் விளைவாக ஒரு சிலர் கட்சிப்பேரை சொல்லிக் கொண்டு மாதாமாதம் மாமுல் தரவேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர் உள்ளனர்.அதற்கும் அதிகாரிகள் உடன்பட்டு திருவள்ளூர் கிடங்கில் பணி செய்ய லஞ்சம் கொடுத்து வந்தனர்.

 கேட்டுக்கு வெளியே சென்ற சில அடி தூரத்தில் இரண்டு மூட்டைகளை தள்ளி விடுவார்கள். அந்த எடை குறைப்பை லாரி போகும்போது மற்ற மூட்டைகளில் இருந்து குத்தி எடுத்து சமன் செய்துவிடுவார்கள், என தெரிந்து கொண்டேன்அது மட்டுமல்ல,எனக்கு முன் பணியாற்றிய கிடங்கு பொறுப்பாளர்கள் உள்ளூர் ரவுடிகளுக்கு மாமுல் கொடுத்து பொது விநியோக திட்டத்தை நடத்தியதையும்  நான் அறிந்து கொண்டேன்.
என்னிடம் அத்தகைய ரவுடிகளை கிடங்கு சுமை தூக்கும் ஊழியர்கள் அறிமுகம் செய்தார்கள்.ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு 50 கிலோ அரிசி அல்லது அதற்குரிய பணம் தரவேண்டும் என சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
அப்படியெல்லாம் தர இயலாது.கிடங்கை இழுத்து மூடிவிட்டு நிர்வாகத்திடம் சாவியை ஒப்படைத்துவிட்டு நான் வேறு இடம் சென்று விடுவேன்’, என்றேன்.
எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை .நாங்கள் பிழைக்க வேறு வழி இல்லை இதை நம்பி தான் நாங்கள் உள்ளோம்என்றனர்.கிடங்கு சுமை தூக்கும் ஊழியர்களும்,உள்ளூர் ரவுடிகளும் சேர்ந்து கொண்டு கிடங்கை நடத்த விட மாட்டோம் என்றனர்.தகவலை காஞ்சிபுரம் மண்டல மேலாளருக்கு தெரிவித்தேன். எனக்கு தொலைபேசி மூலம் அப்போதைய மண்டல மேலாளர்., ‘உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளியுங்கள்என்று,உத்தரவு அளித்தார்.
நான் புகார் அளித்தேன்,காவல் துறை ஊழியர் வந்தார்.அவரை யாரும் மதிக்கவில்லை.அந்த ஊழியர்,என்னைப் பார்த்து, ‘நீங்கள் காவல் நிலையத்திற்கு வந்து விடுங்கள் சார்!என்றார். நான் அவ்வாறே காவல் நிலையம் சென்றேன்.சுமை தூக்கும் ஊழியர்களை  தவிர்த்து, உள்ளூர் ரவுடிகளை காவல் துறை கைது செய்தது.
                 
               142-திருவள்ளூர் மண்டலம் உதயம்                                    

1996 அக்டோபரிலிருந்து மண்டல நிர்வாக தனி அலுவலராக திரு பாட்சா என்பவரை நிர்வாகம் நியமித்தது. அவர் பெரம்பூரிலிருந்து தினமும் திருவள்ளூருக்கு தொடர்வண்டி மூலம் வந்து இறங்குவார். தினமும்,நான் அவரை என் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து திருவள்ளூரில் உள்ள கட்டிடங்களை மண்டல அலுவலகத்திற்கு பொருந்துமா? என்பதை ஆய்வு செய்வதே எங்கள் வேலை.
திருவள்ளூர் மண்டல அலுவலகம்  ஒரு தனியார் கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு 1997 ஏப்ரலிலிருந்து செயல்பட தொடங்கியது.
மண்டல அலுவலகத்திற்கு தர ஆய்வாளர் பதவி இல்லை என்று நிர்வாகம் முடிவு செய்து விட்டது. என்னை பழைபடி காஞ்சிபுரம் மண்டலத்திற்கு மாற்றி விட்டார்கள்.
அதாவது திருவள்ளூர் கிடங்கிற்கு சீனியர் தர ஆய்வாளரான திரு முனிரத்தன ரெட்டியைப் போட தீர்மானித்தனர்.இதில் உள்குத்து வேலை நடந்துள்ளதை நான் அறிந்து கொண்டேன்.
நான் தலைமை ஆலுவலகம் சென்று முறையிட்டேன்.
எனக்கு குடும்பம் திருவள்ளூரில் உள்ளது.என் பிள்ளைகள் அங்கே படிக்கின்றனர்.நான் ஏன் பிற மண்டலம் சென்று பணியாற்ற வேண்டும்?பிற மண்டலத்தவர் திருவள்ளூருக்கு ஏன் பணி மாற்றம் கேட்டு வர வேண்டும்? இது என்ன நியாயம்.?இதன் உட்பொருள் என்ன?’என் கேள்விக்கு எவரும் பதிலளிக்க வில்லை.

ஒரு மாதம் தினமும் தலைமை அலுவலகம் சென்று போராடினேன்.அப்போதைய JMD திரு தசரதன்.ஐஏஎஸ் (இவர், எனது தூரத்து உறவு) GM(A) அவர்களை நான் சந்தித்து முறையிட்டேன். பொது மேலாளரை அழைத்து விசாரித்தார், ‘இவன் கோரிக்கை நியாயமாக படுகிறதே,எதாவது அவனுக்கு ஏற்பாடு செய்யுங்களேன்!~’ என்றார்.
அந்த அதிகாரி, ‘அய்யா,திருவள்ளூர் மண்டலத்திற்கு விருப்பம் தெரிவித்து 4 பேர் பதிவு செய்துள்ளனர்,இவர் இப்பொழுது தான் மனு கொடுத்துள்ளார்.என்றார்.
எனக்கு தாய் மண்டலம் திருவள்ளூராக இருக்கும் போது,மற்றவர்கள் ஏன் திருவள்ளூருக்கு போட்டியிட வேண்டும்?அதன் உட் பொருள் என்ன?’ என நான் வினவினேன்

.(என்னை திருவள்ளூரில் வேலை செய்ய விடக்கூடாது என்பதற்கு உள் குத்து வேலைகள் ஆரம்பித்தனர்.அதாவது திருவள்ளூருக்கு ஒரே ஒரு தர ஆய்வாளர் பதவிதான்,ஆய்வகத்திற்கு தேவையில்லை. கிடங்கிற்கு சீனீயர் எனும் அடிப்படையில் திரு முனிரத்தன ரெட்டியை போட்டுவிடலாம்,என நிர்வாகத்தினர் சட்டத்தை மாற்றினர்.)

இரு அதிகாரிகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.என்னை சில நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்கள்.நான் வெளியே நின்றேன்.,சில நிமிடங்கள் கழித்து,
GM(A) அவர்கள், ‘தம்பி மாலை 6 மணிக்கெல்லாம் உனக்கு நீ கேட்டபடியே போட்டு்த் தருகிறேன் ,இருந்து உத்தரவை வாங்கிச் செல்லுங்கள் என்றார்.
1997-மே மாதம் திருவள்ளூர் மண்டல அலுவலக ஆய்வகத்தில் ஒரு பணியிடத்தை எனக்காக உருவாக்கி என்னை ஆய்வக தர ஆய்வாளராக நிர்வாகம் நியமித்தது. எனக்கு நிம்மதி ஏற்பட்டது என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், இரண்டு மாதம் கூட என்னை ஆய்வக பணியில் நீடிக்க விடவில்லை.திருவள்ளூர் கிடங்கில் திரு முனிரத்தன ரெட்டிக்கு பிரச்சினை ஏற்பட்டதனால், மாற்றம் செய்ய வேண்டும் என நிர்வாகம் தீர்மானித்து விட்டது.

என்னை கிடங்கிற்கு தர ஆய்வாளராக மாற்றினார்கள்.நான் தரக்கட்டுப்பாடு பணியை மட்டுமே பார்ப்பேன், கிடங்கு நிர்வாக பொறுப்புக்கு கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என நான் நிபந்தனை விதித்தேன்’,மண்டல மேலாளரும், ‘சரி ஒரு கண்காணிப்பாளரை போடுகிறேன், அதுவரை நீங்கள் கிடங்கை பார்த்துக் கொள்ளுங்கள்என்றார்.
      
          143-நீங்க சொல்றமாதிரி வேலை செய்யமுடியாது

முதல் நாள் கிடங்கை ஆய்வு செய்து, ‘சரியான அளவில் மூட்டைகளை சமச்சீர்(standardisation) செய்து லாரிகளில் ஏற்ற வேண்டும்என்றேன், அதற்கு அந்த கிடங்கு மேஸ்த்திரி,
நீங்க இருக்கப் போவது,6மாசமோ,ஒரு வருடமோ, வந்தீங்களா வேலையைப் பார்த்தீங்களா என போய்க்கினே இருங்க,நீங்க சொல்லற மாதிரி நாங்கள் வேலை செய்ய முடியாது.’ என்றனர்.
அன்று மாலை என்னை கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூட்டாக என்னை ,நான் அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, நாற்காலியோடு என்னை அலுவலகத்திற்கு வெளியே தூக்கி வந்து போட்டனர். தகவல் தலைமை அலுவலகம் சென்றது.
மண்டல அலுவலருக்கோ தலைமை அலுவலகத்துக்கோ தொழிலாளர்களால் பிரச்சினை ஏற்பட்டு அதனால் பொது விநியோகத் திட்டம் அல்லது சத்துணவு திட்டம் பாதிக்கப்படக் கூடாது. அரசாங்கம் தொழிலாளர் பிரச்சினையில் தலையிடாது.அது எனக்கும் தெரியும். இருப்பினும் சமச்சீர் செய்யப்படும் மூட்டைகளில் எடை குறைவு ஏற்பட்டால் கிடங்கு பொறுப்பாளரான என்னையே குற்றம் சுமத்தும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களை குற்றம் சுமத்தாது. ஆனால் நிர்வாகம் அவர்களை நிரந்தரமாக்கி விட்டதனால், கிடங்கு பொறுப்பாளருக்கு அதிகாரம் குறைக்கப்பட்டுவிட்டது.என் பேச்சை சுமை தூக்கும் தொழிலாளர்கள் செவி மடுப்பதில்லை என்பதை நான் நிர்வாகத் தரப்பிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
அந்த காரியத்தைதான் நான் செய்தேன்.நிர்வகம் என்னை மண்டல அலுவலக ஆய்வுப்பணிக்கு மாற்றியது. பின் வாரத்தில் 2 நாட்கள் மண்டல அலுவலகமும் மற்ற 4 நாட்கள் அகூர் கிடங்கிற்கும் பொறுப்பாக்கியது. 
அதே சுமைதூக்கும் தொழிலாளர்களை வைத்து திருவள்ளூர் கிடங்கு நடந்தது, இன்றும் ஒழுங்கீனமாகத்தான் கிடங்கு பணிகள் நடக்கின்றன. எந்த அலுவலரும் கிடங்கு பணிகளை சீர் செய்ய முன்வராததே இதற்கு காரணம்.
               
             144-அகூரில் அநீதி

அகூரில் எனக்கு இழைக்கப்ட்ட அநீதியை இங்கே விவரிக்க வேண்டும்.
கிடங்கு கையளுகைச் செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.அகூர் ஒரு தனியார் கிடங்கு,நிறுவனம் வாடகைக்கு எடுத்து buffer கிடங்காக வைத்து செயல்பட்டது.
நான் மேலாளர்(கணக்கு) அவர்களிடம் முறையிட்டேன், ‘சார், 5 ஆயிரம் பணத்தை அந்த கிடங்கில் வைத்து விட்டு வருவது பாதுகாப்பல்ல,அதை என்னோடு வைத்துக் கொள்கிறேன்,நீங்கள் ஆய்வுக்கு வரும்போது சொல்லுங்கள் நான் கொண்டு வருகிறேன்என்றேன். மேலாளரும், ‘சரிஎன்றார்.
ஒரு நாள் எனக்கு தெரிவிக்காமல் மண்டல மேலாளர்,மேலாளர் கணக்கு மற்றும் துணை மேலாளர்(த.க) ஆகியோர் ஆய்வு செய்தனர்.நான் மண்டல ஆய்வு பணியில் இருந்தேன். 

திடீரென அகூருக்கு வரச்சொல்லி தகவல் வந்தது,நான் பணத்தை வீட்டிலிருந்து எடுத்துச்செல்ல மறந்து விட்டேன். கிடங்குக்கு சென்ற என்னை மேலாளர் கணக்கு அவர்கள், ‘கையாளுகைச் செலவான ரூ.5 ஆயிரம் எங்கே?’ என்றார்.
சார்,நான் எடுத்துவர மறந்து விட்டேன்.இங்கு பாதுகாப்பு இல்லை என வீட்டில் வைத்திருந்தேன். அலுவலகத்திலிருந்து இங்கு வரும் அவசரத்தில் அதை மறந்து விட்டேன்.என்றேன். ரூ. 5 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டதாக என்மீது major charge போடப்பட்டது.விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிவிட்டது என எனக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு முடக்கம் செய்து ஆணை இடப்பட்டது.
                        ************

1999-ல் நடந்த என் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சியை இங்கு விவரிப்பது நல்லது என நினைக்கின்றேன்.
என் பெரிய மகன்(வினோத்) 12-ம் வகுப்பு முடித்துவிட்டான். படிப்பில் முன்னணியில் இருந்தாலும், அவன் பெற்ற மதிப்பெண்கள் அப்போதைய காலகட்டத்தில் அவன் நினைத்த படிப்பை பெறுவது என்பது சற்று சிரமமாகவே இருந்தது.
என்னுடைய வெய்யிலாளி சமுகத்தில் என் உறவினர் யாரும் மருத்துவரோ,பொறியியலாளரோ அல்லது வழக்குறைஞரோ இருந்ததில்லை.
இவன் குழந்தை பருவத்தில் உடல் நிலை சரியில்லாத நேரத்தில்,நான் சற்று வெறுப்புடன், ‘இந்த டாக்டர் தொழிலே பேஜார்டா, இந்த டாக்டருக்கு படிப்பவர்களெல்லாம் 24 மணி நேர சேவை மனப்பான்மை உடன் வேலை செய்யணும், வாழ்க்கையில் ஓய்வு என்பதே இருக்காதுடாஎன இவன் காதுபட பேசிவிட்டேன்.இதை இவன் மனதில் நிலைப்படுத்திக் கொண்டிருக்கின்றான். இதை நான் மறந்து விட்டேன்.

இவன் பள்ளியில் முதல் நிலை மாணவனாக வருவதை பார்த்து,உயிரியல் பாடத்தை ஊன்றி படிடா என்றேன்.சரிப்பா!’ என்றவன் எனக்கு தெரியாமலே உயிரியல் ட்யூஷனை ஒதுக்கி விட்டான்.
இது எனக்கு தெரியாது.+2 மதிப்பெண்களை நான் கவனித்தேன், ‘என்னடா உயிரியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்து விட்டது,?’ என்றேன்.
அப்பா, நான் உயிரியல் ட்யூஷன் போகலப்பா 
ஏண்டா அப்படி செஞ்சே?’
நீங்கத்தானப்பா சொன்னீங்க, டாக்டர் தொழில் ஒரு ஒய்வில்லா தொழில் என்று,எனவே எனக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் போய் விட்டதுப்பா! 
என்னடா ஒரு பேச்சுக்கு சொன்னேன்,இப்படி பண்ணிட்டியேடா,சமுகத்தில் மருத்துவ படிப்பு மட்டுமே வருமானம் தேடிவரும் படிப்புடா,மீதி படிப்பெல்லாம், வருமானத்திற்கு நாம் தேடிப்போற படிப்புடா...

No comments: