125- மகன் பள்ளியில் சேர மகான் காலை பிடித்தேன்
1993 மே மாதம் என நினைக்கிறேன்.இதற்கு முன் திருவள்ளூர்
நகரத்தில் இயங்கிவரும் DRBCC எனும் தனியார் மேனிலைப்பள்ளியில் பெரிய மகன் படித்து
வருகிறான்.இளையவனை அதே பள்ளியில் சேர்ப்பதுதான் பிள்ளைகளுக்கு மன வேறுபாடு இல்லமல்
இருக்கும் எனும் நினைப்பில் நுழைவுத்தேர்வு எழுதிவன் 6-ம் வகுப்புக்கு
தேர்வாக வில்லை.அந்நாளில் அந்த பள்ளியில் பிள்ளைகள் படிக்கின்றன என்றால்
பெற்றோர்களுக்கு ஒரு ‘கவுரவம்’.
ஒரு நாள் தண்டையார் பேட்டையில் இயங்கிவரும் ஒரு கோதுமை
மாவு ஆலையில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அந்த ஆலையின் மேலாளர், ‘எனக்கு
எத்தனை பிள்ளைகள்,என்ன படிக்கிறாங்க’
போன்ற விவரங்களை கேட்டார்.
அப்போது அந்த ஆலை மேலாளரிடம் இளைய மகனுக்கு அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க முடிய
வில்லையே என ஆதங்கப்பட்டுக் கொண்டேன்.அதற்கு அந்த மேலாளர், ‘சார்,
எங்க முதலாளிக்கு தெரியாத பெரிய மனிதர்களே சென்னையில் இல்லை,நீங்கள்
அவரைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லுங்கள்,அப்புறம்
பாருங்கள் என்ன நடக்கின்றது என்பதை’ என்றார்.‘அப்படியா?’ என்று
சொல்லிவிட்டு நான் அந்த முதலாளி அறைக்கு சென்றேன்.அப்போது அந்த மில் மேலாளர் என்னை
அந்த முதலாளிக்கு அறிமுகம் செய்தார்.
நான், ‘சார்!,திருவள்ளூரில்
இயங்கிவரும் DRBCC பள்ளியின் தலைமை இடம் சென்னையில் உள்ளது.அந்த இயக்குநர்
குழுவில் ஒருவர், சென்னையின் பிரபலமான நகைகைகடையின் உரிமையாளரும் கூட’.
என்றேன்.அதற்கு அவர்,
‘என்ன
சார்,6-ம் வகுப்பு சேர்க்கிறதுல அவ்வளவு கஷ்ட்டமா?,எனக்கு
நீங்க சொல்ற நபர் எனக்கு நல்ல நட்புதான்,நாங்கள்
இருவருமே தினமும் இறகுப் பந்து ஆடும் நண்பர்கள்.நான் சொன்னா செய்வான்,நீங்கள்
பையனுடைய பெயர்,பிறந்த தேதி போன்ற விவரங்களையெல்லாம் தாங்க,அது
ஒன்றும் பிரச்சினை இருக்காது,நீங்க போங்க
பையனை சேர்த்துடலாம்.’
என்றார். அவர்
சொன்ன விவரங்களை அளித்து விட்டேன்.
இருப்பினும் எனக்கு இவர் சொல்வதையே நம்புவதைவிட இன்னொரு இயக்குநர்
ஒருவர்
சென்னையின் பிரபல(ஈகா) சினிமா
தியேட்டர் உரிமையாளர்.அவரை நேரில் சென்று சந்தித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று யாரோ
சொன்னதைக் கேட்டு நான் அந்த உரிமையாளரை அந்த தியேட்டர் அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன்.அவர்
என்ன ஏது என்று விசாரித்து விட்டு, ‘அந்த
மாதிரி நான் யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை’
என கூறிவிட்டார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.நான் கெஞ்சிப் பார்த்தேன்,காரியம்
ஆக வேண்டுமானால் காலைப் பிடித்தாலும் தப்பில்லை என்பார்கள்.அதுபோல அருகில் சென்று
அவர் காலைப் பிடிக்கப் போனேன்,அவர் தடுத்தார்.அப்போதும் அவர் மனம் இரங்க வில்லை,
‘என்னால்
முடியாது ,நீங்கள் போங்கள்’ என
முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டார்.
எனக்கு கண்களில் நீர் வந்து விட்டது.இடத்தை விட்டு
நகர்ந்தேன்.வீடு வந்து விட்டேன்,இரவு 9,30 மணி
இருக்கும்,நான் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்,யாரோ
ஒருவர் வந்து ,
‘சார்,உங்க
பையனுக்கு ‘செலக்ஷன்’ கிடைச்சிருக்கு.
நோட்டீஸ் போர்ட்ல நான் பார்த்தேன்’ என்றார்.
அவர் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள நான் அந்த நோட்டீஸ்
போர்டை இரவு 10 மணிக்கு ஓடோடிச் சென்று பார்த்தேன்.என்னோடு என் பெரிய மகனும்
வந்தான்.என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அடுத்த நாள் ஒரு இனிப்பு பொட்டலம் வாங்கிச்
சென்று அந்த பெருமகனாரைச் சென்று சந்தித்து நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.அப்போ
அவர்,
‘நான் casual ஆகத்தான்
சொன்னேன்,சொன்னதற்கு உடனே செய்திருக்கின்றான். நானும் நேரில்
சென்று அவனுக்கு நாளை நன்றி சொல்கின்றேன்.’ என்றார்.
**********
126-கான்பூர்
பணி மாற்றம்
அதே 1993-ஆம் ஆண்டு,என்னை
வட இந்தியாவில் உள்ள ‘கான்பூர்’
எனும் நகரத்திற்கு(உத்தர பிரதேசம்) சத்துணவு பருப்பு வாங்க அனுப்பினார்கள்.எனக்கு
இந்தி தெரியாது,அவர்களுக்கு இங்லீஷ் தெரியாது.இருப்பினும் அவர்களுக்கு
தெரிந்த அரைகுறை ஆங்கில அறிவை வைத்து பருப்பு வாங்க ஆரம்பித்தேன்.இரண்டு வேகன்கள்
தொகுப்பு அனுப்பி விட்டேன்.
(ஒரு வேகன் தொகுப்பு 40 பெட்டிகள்)ஒவ்வொரு பெட்டியிலும்
80 டன் ஏற்றலாம்.
127-அண்ணன் மறைந்துவிட்டார்
அங்கிருந்த போது,ஒரு
நாள் என் மனைவியை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டாள்.அப்போது, ‘மாமாவுக்கு
(என் அண்ணாவுக்கு) உடல்நிலை மோசாமாக உள்ளது எனவும் நான் உடனே வருவது நல்லது’
எனவும் சொன்னாள்.
(என் அண்ணாவுக்கு வயது 60 அல்லது 63 இருக்கும்.அவருக்கு
தொண்டைப்புற்று நோய் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.புகைப்பழக்கமும், மதுவுக்கும்
அடிமையாகவும் வாழ்ந்தார்.ஒரு ஆண்டு காலம் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்தும்
பயனில்லை!)
உடனே நான் தலைமை அலுவலகம் தொடர்பு கொண்டு என்
அண்ணாவுக்கு உடல் நிலை மோசமாகி வருவதையும் நான் அருகில் இருக்க வேண்டும் என அனுமதி
கேட்டேன். தலைமை அலுவலக அதிகாரிகளும் என்னை விடுவித்தார்கள்.
நான் திருவள்ளூருக்கு திரும்பிய பின் 1993-ஜூன் மாதம் 9ந்தேதி இரவு
12.15க்கு (வைகாசி-27) என் அண்ணா இறந்து விட்டார்.
இவர் ஒரு தியாகி,ஆம்,ஊரில்
தம்பியை படிக்க வைக்க பஞ்ச காலத்தில் வெய்யிலில் சைக்கிளில் கிழங்கு விற்க நாயாய் அலைந்து
உடல் நிலை பாதிப்புக்கு ஆளானார்.
அந்நாளை இங்கே நினைவு கூறலாம்.....1972 ,,நாட்டில்
கால மழை பொய்த்து போனதால் எங்கும் பசி,
பட்டிணி.எங்கள் வீட்டில் கேழ்வரகு விளைவதால் கூழுக்கும் களிக்கும் பஞ்சமில்லை.
இந்நிலையில் நான் கல்லூரி செல்ல மதிய உணவு எடுத்துச்
செல்ல அரிசி வேண்டும்.எனக்கு கூழ் பிடிக்காது,நண்பர்கள்
மத்தியில் களி சாப்பிட்டால் வித்து என்னை ஏளனமாக பார்ப்பார்கள்.இதை அறிந்த எங்கள்
அம்மா என் அண்ணாவைப்பார்த்து
‘தம்பி
பள்ளிக்கூடம் போக எதாவது செய்ப்பா’ என்
அண்ணாவும் யோசித்து,
‘அம்மா!,
தம்பி மதிய சாப்பாட்டுக்காக காலேஜ் போறத நிறுத்தவேணாமா,நான்
நாளையிலிருந்து கிழங்கு விக்க போறம்மா,
அரைப்படி அரிசியாவது வாங்கி வரம்மா... தம்பி தினமும் காலேஜ் போவட்டுமா...’
*********
128- துறை முக
பணி மாற்றம்
மீண்டும் பணியில் சேர்ந்த என்னை சென்னை துறைமுக
வளாகத்திற்கு மாற்றினார்கள். அப்போது,நான்
சென்னை மண்டல தரகட்டுப்பாடு ஊழியர் கூட்டமைப்பின் தலைவர்.மாதாமாதம் சங்கத்தின்
கூட்டம் சங்கத்துக்கு சொந்தமான புரசைவாக்கம் அடுக்குமாடிகுடியிருப்பில் நடக்கும்.
சென்னையில் ரயில் முனைகள்,துறைமுகம்
போன்ற இடங்களுக்கு யாரும் போக விரும்ப மாட்டார்கள்.சங்க கூட்டத்தில் தீர்மானம் போட்டால்
அதே போன்று நிர்வாகத்தில் ஊழியர்களுக்கு பணி மாற்றம் செய்வார்கள்.
துறைமுக பணிக்கு யாரும் போக விரும்ப வில்லை,தலைவன்,
நானே போக வில்லை எனில் யார் போவார்? சரி,
நானே போகிறேன் என தீர்மானிக்கப்பட்டது.ரயில் வேகன்களில் வரும் அரிசியை தரம்
பார்த்து மாவட்டங்களுக்கு லாரி மூலம் அனுப்ப வேண்டும்.
எனக்கு மேலதிகாரியாக,
அதே கோணி துரைராஜ் அவர்கள்,நான் வேண்டாம் என சொல்லும் அரிசி மூட்டைகளை அவர்
வேண்டுமென்றே அனுப்புவார். அங்கிருந்தவாறு நான் சென்னை முது நிலை மண்டல
மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.
‘ஒரு
தர ஆய்வாளரின் man
power- கடந்த 3
மாதங்களாக இந்த மேலாளர் வீண்டிக்கின்றார்.அரிசியின் தரம் பார்த்து லாரிகளில் ஏற்ற
இப்பொழுது நேரமில்லை,என்ன வருகிறதோ அதை அப்படியே ஏற்றுங்கள்’ என்கிறார்,தரம்
பார்க்காமல் ஏற்ற நான் எதற்கு? என்னை வேறு
பயனுள்ள இடத்திற்கு மாற்றவும்’என்று எழுதினேன்.
அந்த கடிதத்தின் பேரில் என்னை அங்கிருந்து எழும்பூர் ரயிலடிக்கு மாற்றினார்கள்.அங்கே வரும்
நெல்லை தரம் பார்த்து அரவை முகவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
129-தண்டையார்பேட்டை
மீண்டும் பணி மாற்றம்
1994-ல் என்னை தண்டையார் பேட்டை(buffer
godown) கிடங்குக்கு
மாற்றினர்கள்.சத்துணவுக்கு வேண்டிய பருப்புகளை தரம் பார்த்து வாங்க வேண்டும்.இங்கே
எனக்கு ஏற்பட்ட மான அவமானங்களை சித்தரிக்க வேண்டும்.என்னைப் போன்று எனது நண்பரும்,மாநில
தரக்கட்டுப்பாடு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் ஆன திரு. ரகுநாதன்,
தண்டையார் பேட்டையின் இன்னொரு கிடங்கில் பருப்புகளை தரம் பார்த்து வாங்கி அடுக்கி
விட்டார்.
பல ஆயிரக்கணக்கான பருப்பு மூட்டைகளை மாநிலத்தின் பிற
மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் ஒரு தனியார் லாரி ஒப்பந்தக்காரர் மூலம்
அனுப்ப வேண்டும்.அப்படி விழுப்புரம் செங்கல் பட்டு போன்ற இடங்களுக்கு அனுப்ப பட்ட 5 லோடு பருப்பு மூட்டைகள் தரம்
சரியில்லை என புகார் வந்ததை அடுத்து
என்னையும் திரு.ரகுநாதனையும் பணி நீக்கம் செய்து விட்டனர்.எனக்கு ஒரே மன உளைச்சல்.தரமான
பருப்பு எப்படி தரம் கெட்டது? என்பதில் எனக்கு
குழப்பம்.திரு ரகுநாதன், ஒரு தனியார் துப்பறியும் ஏஜன்சி மூலம் தவறு எங்கே
நடந்தது என கண்டறிந்து விட்டார்.அதாவது,நாங்கள்
அனுப்பிய பருப்பு லோடுகளை வியாபாரிகள்,
இடையில் ஒரு கிடங்கில் இறக்கி விட்டு இரவோடு இரவாக
தரமற்ற பருப்பு மூட்டைகளை மாற்றி ஏற்றி மாவட்டத்தின் பிற கிடங்குகளில் இறக்கி
விட்டதை அறிந்து ஒரு விவரமான அறிக்கையை தலைமை அலுவலகம் அனுப்பினார்.
130-நாகப்பட்டினம் பணி மாற்றம்
தலைமை அலுவலகமும் அதில் உண்மை இருக்கலாம் எனும்
எண்ணத்தில் பணி நீக்கம் செய்த என்னை நாகப்பட்டினத்திற்கும், திரு
ரகுநாதனை புதுக் கோட்டைக்கும் மாற்றல் செய்து உத்தரவிட்டனர்.
என் மனைவியும் , ‘என்னங்க!,கடந்த
20 வருடங்களாக சங்கம்,யூனியன் என ஊர் ஊரா சுத்தனிங்க,யாரும்
உங்களுக்கு உள்ளூர்ல வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய மாட்டாங்களா?,இப்போ
நீங்க நாகப்பட்டினம் போய் விட்டால் நம்ம பசங்க படிப்பு என்ன ஆகிறது?’ என
ஒரே விசனமாகிப் போய்விட்டாள்.
நண்பர் ரகுநாதனுக்கு அப்போதைய உணவு அமைச்சர் திரு
ஆர்.எம்.வீரப்பன் இடம் நல்ல நட்பு இருந்தது. ‘அதை
பயன் படுத்திக் கொள்ளலாம் வா’ என என்னையும்
அழைத்துக் கொண்டு போனார். தினமும்
அமைச்சர் வீட்டுக்கு போய் விடுவோம்.ஒரு நாள் அமைச்சர் அப்போதைய தலைவர்
மற்றும் மேலாண்மை இயக்குநர் (இவர் நேர்மையானவர்) அவர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு
கொண்டு எங்களுக்கு சென்னையில் மாற்றல் உத்தரவு வழங்க அழுத்தம் கொடுத்தார்.
அந்த அதிகாரி,எதோ
கோவத்தில் மேலிருந்த திரு ரகுநாதன் கோப்பை பார்த்து உடனே சென்னைக்கு மாற்றல்
உத்தரவை வழங்கினார்.உத்தரவை போட்டுவிட்டு அந்த அதிகாரி அமைச்சர் மீதுள்ள கோவத்தில்
விடுப்பில் சென்று விட்டார்.சரி எனக்கும் அது போன்று போட்டு விடுவார்கள் என நானும்
காத்திருந்தேன். ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. யாரும் எனக்கு உதவுவது போல்
தோன்ற வில்லை.
131-“A”க்கு
ஒரு நியாயம்,’B’நியாயம்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தேன்.என் மனு
விசாரணைக்கு வந்தது.அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, ‘what applies to “A” that does not apply to ‘B’ எனினும் இவர்
கோரிக்கை நியமானது,நிர்வாகம் பரிசீலிக்கலாம்.’என சொல்லி என் மனுவை தள்ளுபடி
செய்துவிட்டார்.நீதி மன்றம் போடும் உத்தரவை தான் நிர்வாகம் பரிசீலிக்கும்,ஆனல்
நீதி மன்ற அறிவுரைகளை நிர்வாகம் மதிக்க வேண்டிய அவசியமில்லை!
தலைமை அலுவலகத்தில் எனது கல்லூரிக்கால நண்பரும்,எங்கள்
நிறுவனத்தில் 1976லிருந்து என் சக ஊழியராகாவும் பணிபுரிந்தவர் திரு.மணிபாலன்
அவர்கள்.தொ.மு.ச
வில் மாநில பொருளாளராக உள்ளார்.ஒரு நாள் என்னை தலைமை
அலுவலக வளாகத்தில் சந்தித்தார்.என் குறைகளை கேட்டறிந்தார். ‘இதென்ன
அநியாயமா இருக்கே,நான் என் பொதுச்செயலாளரிடம் சென்று முறையிட்டு,
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரை இப்பொழுதே சந்திக்கின்றோம்,இதற்கு
நியாயம் கேட்டு போராடுவோம்’
என்றார்.அடுத்த
நாள் என்னை சந்தித்த திரு மணிபாலன், ‘சாரி,திருவேங்கடம், எங்களால்
முடியவில்லை.’ என்றார்.
அடுத்த சில நாட்களில் INTUC மாநில பொதுச் செயலாளரான திரு.இளவரி
அவர்கள்,என்னை சந்தித்து, ‘இந்த
அநியாயத்தை எதிர்த்து போராடாமல்,விட மாட்டோம்,உங்களுக்கா
போராட எங்களை அனுமதியுங்கள்’
என்றார்.அவரும்
போராடிப் பார்த்தார்.
சில நாட்களில்,என்னைப்
பார்த்த அவர், ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்றார்.
அதன் பிறகு,அதே
தலைமை அலுவலகத்தில்,திரு சுப்பரமணியம் என்பவர்,இவர்
வலிமை மிக்க, கம்யூனிச சங்கமான, ‘ஷாப் &ஜென்றல் ஒர்க்கர்ஸ் யூனியன்’ அமைப்பின்
மாநில தலைவர் என்னை சந்தித்து, ‘இந்த அநியாயத்தை பற்றி
நிர்வாகத்தை எதிர்த்து கேட்க எங்களுக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்’ என்றார். ‘சரிங்க
சார், கேளுங்க’ என்றேன். இரண்டு
நாளில் அவர், ‘எங்ளால் முடியவில்லை சார்.’ என்றார்.
அதன் பிறகு,மதிமுக
மாநில தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர்,எனக்கு
நல்ல பழக்கம்(அவர் பெயர் மறந்து விட்டது) என்னை
சந்தித்த அவர், ‘சார்,நீங்க எவ்வளவு பெரிய
சங்கப்போராளி,உங்களுக்கா இந்த நிலைமை, இந்த
அநியாயத்தை எதிர்த்து நிர்வாகத்திடம் நியாயம் கேட்போம்,நீங்கள்
சரி என சொல்லுங்கள்,
நாங்கள் வெற்றி பெற்றே
தீருவோம்’ என்றார்.போனவர்
போனவர் தான்,அவர் திரும்பவே இல்லை.
நண்பர் ஒய்.ஆர்.பன்னீர் செல்வமும் நானும் தலைமை
அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டோம். அப்போது அவர், ‘சார்,ஆளும்
கட்சி அஇஅதிமுக.அதன் சங்கத் தலைவர்களில் ஒருவரான திரு மாறன் எனக்கு நன்கு
தெரியும்.அவரிடம் போகலாம் வாருங்கள்.”
என்றார்.‘அவர்கள் கூப்பிடும் போது நாம் போகவில்லை. இப்போது எந்த
மூஞ்சியை வைத்துக்கொண்டு அவர்களைப் பார்ப்பது.?’
‘அதெல்லாம் அவங்க மனசுல வச்சிக்க மாட்டாங்க வாங்க சார் ஒரு முயற்சி செய்து பார்ப்போம்.’
அந்தேரத்தில் எங்களைக் கடந்து திரு மாறன் போய்க்
கொண்டிருந்தார்.அப்போது நண்பர் பன்னீர் செல்வம், அவரை
சந்தித்து என்னை அவரிடம் அறிமுகம் செய்து
நடந்தவற்றை தெரிவித்தார்.
அப்போது,நான், ‘என்ன சார் ஆளுங்கட்சியில
சங்கம் வைத்துக் கொண்டுள்ளீர்கள், இது போன்று ஒரு தலைப்பட்சமா உத்தரவு போட்றாங்க, நீங்க இதெல்லாம் கேட்க
மாட்டீங்களா?’ என்றேன்
No comments:
Post a Comment