Tuesday, December 17, 2019

இ.பி-30


           132-சிங்க நிகர் தொழிற்சங்க தலைவன்

சார், இப்பத்தானே சார், சொல்றீங்க,வாங்க எங்க பொதுச் செயலாளரை சந்திக்கலாம்.என சொல்லிய மறு கணமே அஇஅதிமுக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்.திரு.அ.கு ஏழுமலை அவர்களை,அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.
நடந்த வற்றை பொறுமையாக கேட்டுக் கொண்டு, ‘சார், நீங்க இங்கேயே இருங்க,நாங்க CMDயைப் பார்த்துவிட்டு வருகிறோம். என்றார். மேலே பார்க்கச்சென்ற சங்கத் தலைவர்கள் சில நிமிடங்களில் கீழே இறங்கி வந்து விட்டனர்.என்னைப் பார்த்த சங்கத் தலைவர்,அ.கு.ஏழுமலை அவர்கள்,

சார்,நீங்க எங்க சங்கத்துல ஒருத்தர் சேர்ந்தாப் போதும்,எங்களுக்கு யானை பலம் வந்துவிடும் .உங்களை சென்னைக்கு மாற்றம் செய்யமுடியாது என CMD சொல்லிவிட்டார்,இருப்பினும் இந்த முயற்சியிலிருந்து பின் வாங்க மாட்டோம்.இங்கேயே இருங்கள் நாங்கள்,எங்கள் பேரவைத் தலைவரை அழைத்து வந்து அழுத்தம் தருகிறோம்,உங்கள் கோரிக்கை நியாயமானது என நிர்வாகத்திற்கு புரியவைத்து உங்களை சென்னைக்கு கொண்டுவருவது எங்களுடைய முக்கியமான கடமையாக நினைக்கின்றோம்என்றார். சொன்னவர் உடனே புறப்பட்டு பேரவைத் தலைவரை பார்த்து அடுத்த ஒரு மணி நேரத்தில் CMD யைப் பார்த்தார்கள்.அப்பொழுதும் அந்த அதிகாரி பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

என்னை அழைத்துச் சென்ற திரு. மாறனுக்கு சங்கடமாகிவிட்டது. சார், நீங்க எங்களை மன்னிக்கணும், எங்களால முடியவில்லை.! என்று சொன்னார்.
அப்படியெல்லாம் சொல்லாத மாறன்,நம்மை நம்பி வந்தவரை discourage செய்யக்கூடாது.என சொல்லிவிட்டு,திரு அ.கு. ஏழுமலை அவர்கள், என்னைப் பார்த்து, ‘சார், எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க, நான் நாளை தர்மபுரி போகிறேன், வியாழக்கிழமை வந்து உங்கள் கோரிக்கையை நிர்வாகத்திடம் வலியறுத்தி வெற்றி பெருவோம் எனும் நம்பிக்கை எனக்குள்ளது.என எனக்கு நம்பிக்கை வார்த்தை சொல்லி விட்டு போய் விட்டார்.
நான் வியாழக்கிழமை தலைமை அலுவலகம் சென்றேன்,மாலை 5மணி இருக்கும்.நான் சங்க அலுவலகத்தில் அமர்திருந்தேன்.  எனக்கு திரு ஏழுமலை அவர்கள் தொலைபேசி மூலம் தகவல் கேட்கிறார்,‘சார், உங்களை சென்னைக்கு மாற்ற முடியாதாம்,காஞ்சிபுரம் மாற்றித் தருகிறேன் என்கிறார், நீங்கள் என்ன சொல்கின்றீர்.?’ என கேட்டார்.அதற்கு நான், ‘காஞ்சிபுரம் எனக்கு தெரிந்த தாய் மண்டலம்தானே?நான் அங்கே மாற்றலாகிப் போவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை,சார்என்றேன்.

எதோ நாகப்பட்டினம் இல்லை என முடிவாகிவிட்டது, அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.
1995 ஜூலை மாதம்,மாற்றல் உத்தரவைப் பெற்றுக்கொண்டு காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் சென்றேன்.என்னை திம்மாவரம் நவீன அரிசி ஆலைக்கு தர ஆய்வாளராக பணியில் சேரும்படி உத்ரவிட்டனர். திம்மாவரத்தில் பணியில் சேர்ந்து விட்டு ஒரு நாள் மாநில பொதுச் செயலாளர்,அ.கு.ஏழுமலை அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்.தனியாக அமர்ந்திருந்தார்,
அப்பொழுது நான், ‘சார்,நீதி மன்றத்தாலும், முடியாமல், அமைச்சர் சொல்லியும் கேளாமல், பேரவைத்தலைவர் வற்புறுத்தியும் அசைந்து கொடுக்காமல் இருந்த CMD யின் மனசை எப்படி சார் மாற்றினீர்கள்?’அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, ‘நான் தனியாக தான் சென்றேன்,என்னை யாரும் பின்தொடர வேண்டாம் என சொல்லிவிட்டு,அதிகாரியின் கடைநிலை ஊழியரிடமும் ஒரு 10 நிமிடம் யாரையும் உள்ளே விட வேண்டாம் எனும் வேண்டுதலுடன் அந்த மார்வாடியப் போய்ப் பார்த்தேன், உரையாடல்....
(நிர்வாக இயக்குநர் ஒரு மார்வாடி) அப்பொழுது அவர்,

‘என்ன, ஏழுமலை அவர்(நான்) விஷயத்தில் அவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க?’ அப்பொழுது நான்,
‘சார், அவர் என் சொந்தக்காரர் சார்,அது மட்டுமல்ல அவரை எங்கள் சங்கத்தில் இணைத்துக் கொண்டால்,அவரால் எங்கள் சங்கத்தில் நிறைய உறுப்பினர்கள் சேர வாய்ப்புள்ளது’ என்றேன்.
அதற்கு அவர், ‘அவர் உங்கள் சொந்தம் என்று முதலிலேயே சொல்லியிருக்கலாமே,இவ்வளவு நாள் ஏன் இதை மறைத்தீர்கள்? என்றார். சொன்னவர்,
‘சரி நான் அவரை சென்னைக்கு போட முடியாது,காஞ்சிபுரம் வேண்டுமானால் போடலாம் என்றார்’என்றார். 1
            
              133-மீண்டும் காஞ்சிபுரம் மண்டலம்

அதன் பிறகு ஒரு நாள் என்னை அழைத்து, ‘அவர் நீதி மன்றம் எல்லாம் போயிருக்கார்,அவருக்கு போய் பரிந்து பேசறீங்களே? எப்படி?’ என்று என்னை கேட்டார்.
அதற்கு நான், ‘சார்,அவர் நீதி மன்றம் போய் நீதி கிடைக்க வில்லை,உங்களிடம் அவருக்கு நீதி கிடைத்து விட்டது,இதை அவர் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருப்பார்.நீங்கள் அவர் மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள்,’ என்றேன்,
அப்போது அவர் முகத்தில் புன்னகை தவழுவதை நான் கண்டேன்.’ இவ்வாறு திரு அ.கு,  CMDயிடம் சொன்னதாக என்னிடம் சொன்னார்.      
                  
               134-மீண்டும் கான்பூர்

காஞ்சி மண்டலத்தில் பணி மாற்றி சில நாட்களில்(1995) என்னை up country movement-க்கு அனுப்பி உத்தரவிட்டனர்,நான் கான்பூர் போய் சேர்ந்தேன்.
என்னோடு எனது பள்ளிக்கால நண்பன் திரு தசரதராமனை அனுப்பினார்கள்.
எனக்கு ஏற்கனவே 1993-ல் கான்பூர் சென்ற அனுபவம் இருந்ததால்,அந்த வியாபாரிகள் ஒரு அளவுக்கு தெரியும்.இருப்பினும் நண்பன் என்னிடம், ‘டேய் நீ பேசாமல் இரு, நான் பகுப்பாய்வு செய்த பருப்பை மட்டுமே வாங்க வேண்டும்என்றான்.15 நாட்கள் ஆகி விட்டன.நண்பர்  ஒரு பருப்புகூட வாங்க வில்லை, என்னையும் வாங்க விடவில்லை.
தரமான பருப்பையும் வாங்க மனம் இல்லாமல் திருப்பி விட்டுக்கொண்டிருந்த நண்பனைப் பார்த்து நான் கேட்டேன், ‘நாம் எதற்கு இங்கு வந்துள்ளோம்?,ஏன் தேவை இல்லமல் நல்லா இருக்கும் பருப்புகளையும் திருப்புகிறாய்? என்ன பிரச்சினை உனக்கு?’ என்றேன்.அவனுக்கு கோவம் அதிகமாகி விட்டது.
‘உனக்கு என்னடா தெரியும்?’
‘தரமான பருப்பு வாங்கத் தெரியும்’
‘கிழிச்ச,பேசாம வாயை மூடிக் கொண்டிரு, எல்லாம் எனக்குத்தெரியும்’என்றான்.                                  

 இந்நேரத்தில்  தலைமை அலுவகம், திரு கிருஷ்ணமூர்த்தி எனும் உதவி மேலாளர் (த.க) தலைமையில் நான்கு பேரை அனுப்பியது.
அந்த குழுவில் வந்த நண்பர்,ஆனந்தராஜ் என்பவர், ‘சார், இவனை(தசரதராமனை)வைத்துக்கொண்டு நாம் ஒரு வேலையும் செய்ய முடியாது,இவனை தனியே பருப்பு வாங்க, கல்கட்டாவுக்கு அனுப்பிவிடுவோம்,தனியாக இருந்து இவன் எவ்வளவு பருப்பு கொள்முதல் செய்து அனுப்புகிறான் என பார்ப்போம்’ என்றார்
நானும் சரி, என்றேன்.நண்பனை பிரித்தனுப்பும் போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
                    
          135-மீண்டும் மும்பை பணி மாற்றம்

1995 நவம்பரில் மும்பை சென்றோம்.மும்பையிலிருந்து தினமும் டெக்கான் குயின்எனும் பழம் பெரும் விரைவுத் தொடர்வண்டியில் பூனாசென்று அங்கிருந்து சாங்லிபோன்ற இடங்களில் இருந்து பருப்பு வாங்கி தினமும் லாரியில் தமிழகத்திற்கு அனுப்பினோம்.
1995 டிசம்பர் 2 தேதி ஆகிவிட்டது.நான் டிசம்பர் 5ல் எனது கிராமத்திற்கு என் தாய் தந்தையரின் நினைவுநாள் அனுசரிக்க போக வேண்டும்.
தலைமை அலுவலகம் தெடர்பு கொண்டு GM(QC) திரு லட்சுமண் ராஜ் அவர்களிடம் அனுமதி கேட்டேன்.அதற்கு அவர்,  ‘உங்களுக்கு ஒரு பதிலி அனுப்புகிறேன் ,நீங்கள் உடனே புறப்பட்டு வந்து விடுங்கள்’ என்றார்.
           
            136-கல்கட்டா பணி மாற்றம்

நான் குடும்பத்தோடு கிராமத்திற்கு சென்று தாய்தந்தையாரின் நினைவுநாளை அனுசரித்துவிட்டு மீண்டும் டிசம்பர் 7 தேதியில் தலைமை அலுவலகம் சென்றேன்.அங்கே என்னை கல்கட்டா போகும்படி சொல்லி விட்டனர். திரு கிருட்ணமூர்த்தி தலைமையில் மும்பாயில் இயங்கி வந்த குழவை கல்கட்டா போகும்படி கூறிவிட்டனர்.நானும் திரு.கிருட்ணமூர்த்தி தலைமையில் இணைந்து கொண்டேன்.1கல்கட்டா எஸ்பளனேட் பகுதியில் உள்ள பார்க் தெருவில் உள்ள ஓட்டல் ஹிராவில் தங்கினோம்,
அங்கிருந்து தினமும் கல்கட்டாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள(சோனா கஞ்ச்) பருப்பு ஆலைகளில் உள்ள ஆஸ்ட்ரேலியாவை இருப்பிடமாக கொண்ட ஒருவகை பட்டாணி பருப்பை(CHIK PEAS) வாங்கி தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

அங்கே தென்னிந்திய உணவு வகைகள் கிடைக்காது. காலையில் பணிக்கு கிளம்பும் முன்,அந்த மண்ணின் காலை உணவாகிய,பூரி,ஜிலேபி மற்றும் தயிர் போன்ற கூட்டு உணவை உண்டு விட்டு,பின் மதிய உணவுக்குத் தேவையான  ஆப்பிள்,வாழைபழம் போன்றவைகளை மூட்டை கட்டிக் கொள்வோம். 20 கிமி தூரத்தில் உள்ளசோனா கஞ்ச்எனும் இடத்தில் உள்ள ஆலைகளில் எங்களுக்கு வேலை.
எங்களை கண்டதும்,ஆலை உரிமையாளர்கள் எங்களுக்கு மண் சொப்பில் 20 or30 ml தேநீர் தருவார்கள். தேநீர் அருந்திய உடன் பான் பராக் அல்லது பீடா தருவார்கள். நானும் அதை மென்று வைப்பேன், அதுவே தொடர்பழக்க மாகிவிட்டது.பருப்புகளை பகுப்பாய்வு செய்து லாரியில் ஏற்றி தார்ப்பாய்கட்டி சீல் வைத்துஇன்வாய்ஸ்போட்டு  தமிழ் நாட்டுக்கு அனுப்ப வேண்டும்

சில நாட்கள்டோலி கஞ்ச்எனும் துறைமுக நகருக்கு (அங்குதான் புகழ் பெற்ற கல்கட்டா காளி கோயில் உள்ளது)கல்கட்டா மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அங்கே பருப்பை பகுப்பாய்வு செய்து தமிழ் நாட்டிற்கு லாரியில் ஏற்றி விடுவோம்.இரவு நேரங்களில் கல்கட்டா தெருவோர உணவு(homely mess) விடுதிகளில் உருளைக் கிழங்கு போட்டு வேகவைத்த  மசி மீன் குழம்பு வகை மிகவும் ருசி வாய்ந்தது.கங்கை நதியில் கிடைக்கும் மீன் வகைகளில் மசி மீன் ,நம்மூர் விரால் மீன் போன்று இருக்கும்.வயிறு நிரம்ப அதை உண்டு விட்டு படுக்கப் போய் விடுவோம்.
          
          137- ஓட்டல் பற்றி எரிந்து விட்டது

1995 டிசம்பர் கடைசி  என்று நினைக்கின்றேன்,நானும் திரு கிருட்ணமூர்த்தியும் ஓட்டல் இரண்டாவது மாடியில் ஒரு அறையில் தங்கி இருந்தோம். காலை வேளை.தங்கியிருந்த அறைக்கு திடீர் புகை வந்தது.அவர் குளித்துக் கொண்டிருந்தார்,நான் குளிக்க தயாராக இடுப்பில் துண்டு கட்டியிருந்தேன்.அறையில் புகை சூழ்ந்து கொண்டது.கீழே இருந்து மக்கள் சத்தம் போட்டனர்.

 ‘உடனே இறங்கி வந்து விடுங்கள்,கட்டிடம் பற்றி எரிகிறது!’ என்றனர்.நான் கட்டிய துண்டோடு புகை மண்டலத்தின் ஊடே படியில் இறங்கி வந்துவிட்டேன், என்னைத் தொடர்ந்து கிருட்ண மூர்த்தியும் அரைகுரை உடையோடு ஓடி வந்துவிட்டார்.தீயணைக்கும் எந்திரங்கள் வந்து,தீயணைப்பு வீரர்கள் மாடி மேலே மாட்டிக் கொண்டவர்களை ஏணி போட்டு இறக்கி விட்டனர்.
அது 5 மாடி கட்டிடம்.ஒரு சிலருக்கு லேசான காயம்.யாருக்கும் ஆபத்தில்லை.ஆனால் மாட்டிக் கொண்டவர்களை காப்பாற்றப் போன தீயணைப்பு ஊழியர்கள் மேசைமீது இருந்த பெங்களூரில் வாங்கிய எனது கைகடிகார (hmt-gold)த்தை களவாடிவிட்டனர். எனது உடைகள் மட்டும் எரியவில்லை.மற்ற நண்பர்கள் உடைகள் எரிந்து விட்டது.

அந்த லாட்ஜில் இன்னொரு அறையில் என் சக நண்பர்கள் திரு கனகராஜ்,திரு கலியசாமி(கடலூர் intuc தொழிற்சங்க தலைவர்),திரு.ஆனந்தராஜ்(மதுராந்தகம்) ஆகியோர் தங்கி இருந்தார்கள்.அந்த தீ விபத்தை திருவள்ளூரில் தொலைக் காட்சிகளில் எனது மனைவி பார்த்து விட்டு கடிதம் எழுதினார்.
கல்கத்தாவிலிருந்து திருவள்ளூர் கிடங்கிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ‘ஆபத்தில்லை’ எனும் சேதியை தெரிவிக்கச் சொன்னேன்.
1996 மார்ச்சில் Up country இயக்கம் முடிந்து,1996-ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம்,மண்டல அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்.
                   138-மீண்டும் திம்மாவரம்

என்னை திம்மாவரம் நவீன அரிசி ஆலையில் தர ஆய்வாளராக பணியில் சேர ஆணை இட்டனர்.நான் திருவள்ளூரில் இருந்து செங்கல்பட்டுக்கு தினமும் பணிக்கு செல்ல வேண்டும்,அதே நேரத்தில் செங்கல்பட்டிலிருந்து நண்பர் திரு ராஜகோபால் (த.ஆ) தினமும் திருவள்ளூருக்கு பணிக்கு  வரவேண்டும். ஏன் இந்த முரண்பாடு?
             
                139-17 ஆண்டுகள் கழித்து திருவள்ளூர்

நான் மண்டல அலுவலகத்தை அணுகினேன், ‘என்னை திருவள்ளூர் கிடங்கிற்கும்,திரு ராஜகோபால் அவர்களை செங்கல்பட்டிற்கும் எதிரெதிராக(mutual transfer) மாற்றினால் என்ன?’
இருவரும் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொடுங்கள், மாற்றித் தருகிறோம் என்றனர். அவ்வாறே நான் திருவள்ளூர் கிடங்கிற்கு 17 ஆண்டுகள் கழித்து வர முடிந்தது.
         
             140-வெய்யிலாளி பெண்களுக்கு அரசு வேலை

திருவள்ளூர் கிடங்கில் பணியில் சேர்ந்தவுடன் கிடங்கில் தினக் கூலிகளாக பணியிலிருக்கும் திருமதி குமாரி,திருமதி ராதா மற்றும் திரு விக்டர் எனும் மூவரையும் சென்னை மண்டலத்தில் போனஸ் வாங்கி கொடுத்தது போல் இவர்கள் பயனடைய ஆவன செய்தேன்.சென்னை தலைமை அலுவலகத்தில் எமது சங்கத்தின் பொதுச் செயலாளரான திரு அ.கு. ஏழுமலை அவர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்தேன்.

திருவள்ளூர் மாவட்ட முழுவதிலும் பணி புரியும் கிடங்கு தினக்கூலிகளுக்கு அடிப்படை ஊதியம் போட்டு ஆணை வழங்கப்பட்டது.அதே போன்று காஞ்சிபுரத்திலும் ஏற்பாடு செய்யுமாறு அங்கே பணி புரியும் எனது நண்பர் திரு வாசுதேவனை கேட்டுக் கொண்டேன்.ஆனால், அவர், ‘உனக்கு வேறு வேலையே கிடையாதா?இதுகளை எல்லாம் நிரந்தர பணியாளராக்கினால் இதுகளெல்லாம் நம்மை மதிக்குமா?’
என  என்னை கேள்வி கேட்டு எனது நண்பரும்,திமுக தொழிற்சங்கத் தலைவருமான திரு.சுந்தரவரதன் ஆகியோர்  மடக்கிவிட்டனர். இதுவரை அங்கே தினக்கூலிகள் பணி நிரந்தரப்படுத்தப்படவே இல்லை அது மட்டுமல்ல அதனை தொடர்ந்து, கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர்களும், ‘எங்களுக்கும் பணி நிரந்தரம், போனஸ் வேண்டும் என போராடினர். வெற்றியும் பெற்றனர்.

No comments: