Wednesday, November 6, 2019

இ.பி-5


                        13-சம்பந்தம்

அப்பொழுது என் அப்பா, அப்பாவின் நண்பரின் வளர்ப்பு பிள்ளையான திரு சம்பந்தம் எனும் சக மாணவனுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, ‘என் பையனை பார்த்துக்கப்பாஎன போய்விட்டார். அன்றிலிருந்து இன்றுவரை சம்பந்தம் நட்பு தொடர்கிறது.

அடுத்த நாள் நான் பள்ளிக்குச் செல்லும் பழக்கத்தை வழக்கமாக கொண்டேன்.எங்கம்மா என்னை தினமும் குளித்து முடித்து உடையணிந்து பூஜையறைக்கு சென்று ஊதுவத்தி கற்பூரம் கொளுத்தி அங்கு உள்ள சாமி படங்களுக்கு தீபாராதனை செய்து முடித்து பின் உணவறுந்திவிட்டு பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது அன்புக்கட்டளை....!புத்தகப்பையை தோளில் மாட்டிக்கொண்டு காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவேன்.

ஒரு நாள் எங்க மாமா,நான் பூஜை செய்வதைப் பார்த்தார்.இவர் ஒரு கடவுள் மறுப்பாளர்.இருப்பினும் செய்யும் வேலையை ஒழுங்காச் செய்யவேண்டும் என்பார்
அவர் என்னைப் பார்த்து, ‘இப்ப பூஜை செஞ்சியே என்ன சொல்லி கடவுள கிட்ட வேண்டிக்கிட்டே?’
 ஒன்னுமில்ல

‘ஒன்னுமில்லாத எதுக்குடா பூஜை செய்யணும்?’ மேலும் அவர்,தேவாரம் திருவாசகம் பாடிய புலவர்களெல்லாம் கடவுளிடம் எது வேண்டும்? என்ன வேண்டும்? என வேண்டிதானே பாடினர்.அவ்வளவு ஏன் நம் காலத்து ராமலிங்க அடிகளாரே

மதி வேண்டும்,நிதி வேண்டும்,நின் கருணை வேண்டும்,நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்... என முருகனை வேண்டி பாடினாரே.... நீயும் எது வேண்டும் என வேண்டி பாடி பூஜை செய்என்றார்.

‘நான் சொல்லும் பாடலை தினமும் கடவுளிடம் பாடி வேண்டிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்’

‘சரி மாமா’

‘பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும்கலந்துனக்கு நான் தருவேன் துங்கக்கறி முகத்து தூமணியே நீ யெனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா’

‘இது போன்று பாடி பூஜை செய்’ என பாடலை எழுதிக் கொடுத்தார்.

‘சரி மாமா’

அவர் செல்லியவாறு தினமும் பாடி பூஜை செய்துவிட்டு பள்ளிக்கூடம் செல்வேன்,ஆனால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் நடத்தும் பாடம் தான் மண்டையில் ஏறாது! எதுவும் மனதில் பதியாது! திரு ராமன் அவர்கள் எங்கள் வகுப்பு ஆசிரியர் ஆவார்,இவர் திருமதி ராஜாமணி அம்மையாரின் கணவர் ஆவார்.
இருவருமே பார்ப்பனர்கள்.திரு ராமன் அவர்கள்,ஆங்கில வகுப்பு எடுப்பார்.சரியாக படிக்காத மாணவர்களை நிற்கவைத்து கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடிப்பார்.தாங்க முடியாத வலியால் துடிப்பேன்.
என்னைப் போன்று தினமும் அடிவாங்கும் நாண்பர்கள் இருந்தனர். வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாட விவரங்கள் எதுவும் புரியாது. எனது நண்பன் சம்பந்தனுக்கும் தான்.

நண்பர் சம்பந்தத்துக்கு  பாட்டியார் வீடு சென்னை திருவற்றியூர்.அவர் ஒரு எம்ஜியார் ரசிகர்,எம்ஜியார் படம் என்றால் வெளியிடப்படும் அன்றே சென்னைத் திருவெற்றியூர் திரையரங்கில் சென்று படம் பார்த்து விடுவார். பார்த்துவிட்டு  அடுத்த நாள் எங்களுக்கு கதை சொல்லுவார்.அந்த படங்களெல்லாம் ஆரணிக்கு ஒரு ஆண்டு கழித்துத்தான் வரும்.நண்பர் சம்பந்ததுக்கு நல்ல பழக்கங்கள் உண்டு,அதாவது தினமும் எங்கேயாவது ஒரு டீக்கடை அல்லது அரிசிக் கடையில் தினசிரி செய்தி தாள்களை சில நிமிடங்கள் படிப்பது, எனக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டது.
இன்று வரை அந்த பழக்கத்தை விடவில்லை!  அதே போல் நூலகம் சென்று புத்தகங்களை படிப்பதும்.
எங்கள் ஊரிலிருந்து திரு. முருகன் எனும் நண்பர் என்னோடு ஆறாம் வகுப்பு சேர்ந்தார்.துணைக்கு வருவார்,அவருக்கும் படிப்பு வராது. ஒரு நாள் முருகன்,

டேய்,திராங்குடம்(திருவேங்கடம்)!, என்னால் அந்த வாத்தியார் கிட்ட தினமும் அடிவாங்க முடியாது,நான் எனக்கு கட்டித்தரும் மதிய உணவை இந்த ஆற்று மதகில் வைத்து விடுவேன். கரையில் இருக்கும் சவுக்குத் தோப்பில் விளையாடிவிட்டு மதியம் இந்த உணவை
முடித்து விட்டு மாலை நீ வரும் வரை இங்கு காத்திருப்பேன்,நீ போய் உதை வாங்கிக் கொண்டு வா’. என்பார்.
         
                      14- சீட்டு,கோலி,நீச்சல்,கோட்டி புள்

எனக்கும் முருகனுக்கும் சிறு பிள்ளை விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்.தீப்பெட்டி அட்டைகளை சீட்டுகட்டுப் போல் சேகரித்து அதை வரிசையாக அடுக்கிவிட்டு 10 அடி தூரத்திலிலிருந்து அட்டைகளை குறிபார்த்து சிறு சதுரவடிவ கல்லால் அடிப்பது.இதில் அதிக அட்டைகளை சேகரிப்பதில் முருகன் வெற்றி பெற்று விடுவார்.
நான் அந்த மாதிரி அட்டைகளை நூற்றுக்கணக்கில் சேமித்து வைப்பது என் பழக்கம்.அது மட்டுமல்ல வண்ண கோலிகளை சேகரித்து ஒரு பெரிய டப்பாவில் வைத்து மூடி பாது காப்பேன்.விடுமுறைக் காலங்களில் நண்பர்களோடு பேந்தா விளையாட்டு விளையடுவது என் பொழுது போக்கு.பெரிய பாளையம் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் பம்பரங்கள் வாங்கி விளையாடி உடைப்பது உற்சாகமான விளையாட்டு.

சிறுவர்களிடையே கோட்டி புள்விளையாட்டு கிராமங்களில் பிரபலமானது.இது ஒரு வகையில் முரட்டுத்தனமான விளையாட்டு என்று கூறலாம். கண்களையும் மண்டையையும் பதம் பார்க்கும் விளையாட்டு. கிராமத்து சிறுவர்களுக்கும் வரும் விசில் அடிக்கும் பழக்கம் எனக்கு வராது.அதே நேரத்தில் கண்கள் சிவக்கும் வரை மதியம் 11 மணிக்கு கிணற்றுக்குசென்றால் மாலை 4 மணி வரை நண்பர்களுடன் நீச்சல் அடிப்பது எனது விருப்பமான பொழுது போக்கு.ஆனால் அதில் கூட கிணற்றின் மேல்
நின்று கொண்டு குட்டிக் கரணம் போடும் நீச்சல் எனக்கு வராது. பயம் தான் காரணம்.

தீபாவளிக்க காலங்களில் காற்றாடி செய்து நண்பர்களுடன் டீல் செய்வது என்னைப் போன்ற சிறுவர்களுக்கு ஆனந்தமான விளையாட்டு.எல்லா வீடுகளிலும் என் நண்பர்கள் பட்டாசு வான வேடிக்கைகள் செய்வார்கள்.எனக்கும் என் தம்பிக்கும் எங்க அப்பா,கம்பி மத்தாப்பு,கல் தப்பாசு,ஓலை டப்பாசு(பட்டாசு) வாங்கி தருவார்,அதற்கு மேல் கேட்டால் அடி உதைத்தான் கிடைக்கும்.

மழை,வெள்ளமாக இருந்தாலும் பள்ளிக்கூடம் செல்லும் பழக்கத்தை நிறுத்த மாட்டேன்,ஆற்று வெள்ளத்திலும் தலைமேல் புத்தக கட்டை வைத்து நீந்திக் கொண்டு செல்வேன். தலைக்கு மேல் வெள்ளம் போனால்,யாராவது நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தினால்,ஒரு கையால் அவரின் இடுப்பு அறைஞாண் கயிற்றை பற்றிக் கொண்டு மறு கையை தலைமேல் இருக்கும் புத்தகத்தை பிடித்துக் கொண்டு நீரில் மிதந்தவாறு அக்கரைக்கு சென்று விடுவேன்.

விடுமுறைக் காலங்களில் என்னை மாடு மேய்க்க விடுவார்கள்.எங்கள் வீட்டில் சுமார்  பசுமாடுகள் கன்றுமாக 25 முதல் 30 வரை  இருக்கும்.
கிராமத்தில் மாடு மேய்க்கும் என்னைப்போன்ற சிறுவர்கள் 10 பேர் கூடிவிடுவோம்.மாடுகளை காட்டில் விட்டு மேயவிட்டு,நாங்கள் , ‘டீயாண்டோர், மற்றும் ஓலேலி விளையாட்டுகள் விளையாடுவோம்.
மாடு மேய்ப்பவர்கள் எல்லாரும் கையில் ஒரு கொம்பு இருக்கும்.ஒருவனை தேர்வு செய்து அவன் யாராவது ஒருவனை ஓடிப்பிடிக்க வேண்டும்.
ஓட முடியதவன்எதாவது ஒரு மாட்டு கொளம்படியில் வைத்து நின்று விடுவான்.அவனை விடுத்து இன்னொருவனை தேடி ஓடும்போது துரத்தி ஓடுபவனால் முடியவில்லை எனில் டீயாண்டோர் என சொல்லிவிடுவான் அப்போது அவன் எதாவது மாட்டு கொளம்படியில் கொம்பு வைத்து நின்று விடவேண்டும், அவ்வாறு கொளம்படி கிடைக்க வில்லை எனில் அவன் வெளியேற வேண்டும்,அடுத்து அவன் ஓடி பிடிக்க வேண்டும்.இதற்கு கொளம்படி விளையாட்டுஎன்றும் ஒரு பேர் உண்டு.

ஒலேலி’ -இது ஏரி அல்லது ஆழமான கிணறு போன்ற நீர் நிலை விளையாட்டு.நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே ஆட முடியும்.நீச்சல் தெரியாதவர்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பார்கள்.இதிலும் ஒருவனை தேர்வு செய்வார்கள்.ஜூட் சொன்னவுடன் மற்றவர்கள் எல்லாம் நீரில் மூழ்கி விட வேண்டும்.தேர்வானவன், கவனித்துக் கொண்டே இருப்பான். யார் நீரில் மூழ்கியவர்கள் மேலெழுந்து தலை தூக்குகின்றனரோ அவர்களை, ‘ஓலேலி என்பான்.அதன் பிறகு ஓலேலி சொல்லப்ட்டவன் நீரில் மூழ்கி எழுபவனை காணவேண்டும்.இது ஒரு தொடர் விளையாட்டு.மூச்சுப் பயிற்சிக்கு சிறந்த விளையாட்டு.
         
             15-மூன்றாவது அக்காவின் முண்டச்சி வாழ்க்கை   

1964-ல் எங்கள் குடும்பத்தில் நடந்த துயர சம்பவத்தை நான் குறிப்பிட வேண்டும்,எனக்கு இருக்கும் நான்கு அக்காக்களில் மூன்றாவதாக அக்கா பெயர் ராதா.ஏற்கனவே திருமணமான எங்கள் பங்காளி அக்கா இறந்து போனாதால்,அவருடைய கணவருக்கு இரண்டாம் தாரமாக எங்க மூனாவது அக்கா வாழ்க்கை பட்டார்கள்.அது கன்னிபுத்தூர் அருகே பூரிவாக்கம் எனும் சிற்றூர்.

திருமணம் ஆனவுடன் எங்க மாமா,எங்கள் ஊரில் தேநீர் கடை வைத்து பிழைப்பை நடத்தி வந்தார்.திருமணம் ஆகி ஓராண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.அதற்கு புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகி ஓராண்டில் இறந்து விட்டது.அதே துயரத்தில் எங்க மாமா படுத்த படுக்கையாகி விட்டார்.சில மாதங்களில் அவரும் இறந்து விட்டார்.எங்க அக்கா மணமாகி 2 ஆண்டுகளில் விதவையாகி(1966) .தனி மரமாகிவிட்டார்.தேநீர் மற்றும் மளிகை கடையை தொடர்ந்து எங்க அக்கா நடத்த தீர்மானிக்கப்பட்டது.எங்க அக்காவிற்கு வாலிப வயதில் (20 வயது தான் இருக்கும்) தொடர்ந்து கடையை நடத்துவது கஷ்ட்டமான காரியமாகிவிட்டது. எங்க அப்பா,அம்மாவிற்கு இது ஒரு பெரிய பிரச்சினை.

சில காலம் விடுமுறை காலங்களில் நானும் மற்ற நாளில் எங்க அப்பாவும் கடையை நடத்தி வந்தோம்.நான் கடையில் உட்காரும்போது ஒரு தேங்கா பிஸ்கட்,ஒரு பொறை,ஒரு பன் என அன்றைய லாபத்தை தின்று விடுவேன்.

இரவு நேரத்தில் எங்களுக்கு இருக்கும் சுற்றுக்கட்டு வீட்டின் கூடத்தில் என் தம்பி,திருமணம் ஆகாத என் கடைசீ அக்கா,இந்த விதவை அக்கா மற்றும் நான் மொத்தம் நான்கு பேரும் ஒரே பனை ஓலைப்பாயில் படுத்துக் கொள்வோம்.

பெரிய அண்ணாவுக்கு பெரிய அக்கா,சின்ன அண்ணாவுக்கு சின்ன அக்கா,எனக்கு விதவை அக்கா, நான்காவதாக உள்ள அக்காவுக்கு  என் தம்பி தலை கட்டு கட்ட வேண்டும் என நாங்கள் பேசிக் கொண்டது உண்டு.
இந்நேரத்தில் எங்கள் அம்மா, விதவையான பெண் வீட்டில் இருப்பது சரியல்ல,அவர்களை பாரிவாக்கத்தில்
இருக்கும் என் பெரிய அக்காவின் பராமரிப்பில் இருக்கட்டும் என அனுப்பி விட்டார்கள்.

1965-ல் எங்கள் சின்ன அண்ணாவிற்கு திருமணம்.1971 வரை எங்களோடு கூட்டுக் குடும்பமாக இருந்தார்.கருத்து வேறுபாடு அதிகமாகவே, தனிக்குடித்தனம் சென்று விட்டார்.
                        
                         பசிக்கு நாவல்பழம்

எங்கள் வீட்டைச்சுற்றி பெரிய பெரிய ஆறு அல்லது ஏழு நாவல் மரங்கள் இருக்கும்.ஊரில் உள்ளவர்கள் மட்டுமல்ல சுற்று வட்டார மக்களும் அந்த நாவல் பழத்தை ருசிக்க தேடிவருவார்கள்,சிலர் கூடையில் சேகரித்து ஆரணி கடைத்தெருவில் விற்று பிழைப்பு நடத்துவார்கள், எங்கம்மா அவர்களை கனிவோடு நடத்துவார்கள், ‘பாவம் கஞ்சிக்கு இல்லாதவங்க விற்று பொழைக்கட்டும்என்பார்கள்.
எனக்கு மட்டும் எங்க அம்மா,ஒரு நாவல் மரத்தை யாரும் தொடாதவாறு பாதுகாத்து வைப்பார்கள்.மாலை நேரம் பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்ததும் அந்த நாவல் மரத்தில் உள்ள ,கனிந்த நாவல் பழங்களை பறித்து உண்பேன்.

ஒரு நாள் ஒரு நாவல் மரத்தின் உச்சிக்கு சென்று அதன் கிளையில் காலை வைத்தேன்,வைத்த உடனே அந்த கிளை முறிந்து விட்டது,அது 60 அடி உயரமுள்ள மரம்,யாருக்கும் தெரியாமல் அந்த மரத்தின் அடிக்கிளையில் விழுந்து தொற்றிக் கொண்டேன்,பின் நானே கிழிறங்கி வந்தேன்,லேசான சிராய்ப்பு உடலில்.காயத்தை பார்த்த உடன் எங்கம்மா பதறிவிட்டார்....  அவ்வளவோ உச்சிக்கு ஏன்டா போன....இனி கீழ் கிளையில் பறித்து சாப்புடு கண்ணா..என்று வாரி அணைத்து அழுதுவிட்டார் . 
                 
                              16-வீட்டில் வானொலி

1966-ல் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது,விடுமுறையில் ஒரு நாள் அம்பத்தூர் மேனாம்பேட்டில் வசிக்கும் எங்கள் அக்கா  (பெரியப்பா மகள்) வீட்டிற்கு சென்றேன். (இவர் 18 வயதில் இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்று இளம் வயதில் விதவையானவர்.
கறவை மாடுகளை பராமரித்து அக்கம்பக்கம் பால் ஊற்றி அதில் வரும் வருமானத்தை வைத்து தன் பிள்ளைகளை காப்பாற்றினார்.(இப்பொழுது இவர் இல்லை,தன் 80-ம் வயதில் இறந்து போனார்)அப்போது அவர் வீட்டில் ஒரு ட்ரான்சிஸ்டர் ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் நான்,
அக்கா இந்த ரேடியோவை எனக்கு கொடுக்கா,நீ வேற வாங்கிக்கோக்கா
சரிடா,ரூ.50 இருந்தா கொடுத்துட்டு எடுத்துக் கொண்டு போ,நான் வேற வாங்கிக் கொள்கிறேன்,’ என்றார்.
படிப்பு நேரம் போக இரவு நேரங்களில் சினிமா பாடல்களையும் நாடகங்களையும் கேட்டு மகிழ்ந்த காலங்கள் அவை.
அப்பல்லாம் தொலைக்காட்சி கிடையாது.வானொலி கூட 1960களில் தான் கிராமங்களுக்கு வந்தது.ஒரு கிராமத்தில் ஒன்றோ அல்லது இரண்டோ வானொலிப் பெட்டிதான் இருக்கும்.எங்கள் ஊரில் நான் மட்டுமே ட்ரான்சிஸ்ட்டர் வைத்திருந்தேன்,அக்கம் பக்கம் இருப்பவர்கள் இரவு நேரத்தில் விவிதபாரதி விளம்பரதாரர் நிகழ்ச்சிகளான நாடகங்களாகவும், திரையிசைப் பாடல்களாகவும் ஒலிபரப்பாவதை கேட்டு ரசிப்பார்கள்.இரவு 9.15 மணி வரை ஒலிபரப்பாகும்.
கடைசியாக ஒலிபரப்பாகும்,பிரபல சினிமா மற்றும் நாடக இயக்குநர்களான சோ.கிரேசி மோகன்,எஸ்வி சேகர் போன்றோரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றது.எனது சிந்தனைத் திறனை வளர்த்ததும் வானொலி பெட்டிதான்.அதன் பின் சினிமா எனலாம்.
                               ***
            
                     17- எழுதரே,எழுதரத படிக்க முடியல!

8-ம் வகுப்பு ஆசிரியை ஒரு நாள், ‘நீ நல்லா படிக்கிற, ஆனா, நீ என்ன எழுதர? அதை நீயே கொஞ்சம் படித்துச் சொல்லேன்...!என நான் எழுதிய அரையாண்டு வினா-விடைத்தாளை என் வகுப்பு மாணவர்கள் மத்தியில் கொடுத்து படிக்கச் சொன்னார்கள்.
என்ன எழுதினேன் என எனக்கே தெரியவில்லை, எழுத்தை கூட்டி ஏதோ படித்தேன்
அப்போ அந்த ஆசிரியை,
நீ, எழுதனத நீ..யே படிக்க முடியல என்னால மட்டும் எப்படிடா படிக்க முடியும்?’ மாணவர்கள் மத்தியில் எனக்கு  வெட்கமாகிப் போனது.அன்றிலிருந்து நான்கு மற்றும் இரண்டு கோடு போட்ட நோட்டு புத்தகத்தில் ஆங்கில மற்றும் தமிழ் எழுத்துப் பயிற்சி கொடுத்தார்கள்.அப்பொழுதும் ஒற்றை கோடு போட்ட நோட்டில் எழுத்து வடிவங்கள் சரியாக வரவில்லை.இப்பொழுதும் இதே நிலைதான். !

 நான் எட்டாம் வகுப்பு போகும் ஆண்டில்(1965-66) எங்க அம்மாவிடம்,
எனக்கு ஒரு கை கடிகாரம் வாங்கிக் கொடும்மாஎன்றேன். அதுக்கென்ன வாங்க்கின்னா போச்சு,’
அருகிலிருந்த என் அண்ணாவிடம் , ‘டேய் குழந்தைக்கு ஒரு கடியாரம் வாங்க்கிக் கொடுடா..
அதுக்கென்ன வாங்கிட்டாப்போச்சு
அன்று மாலையே  தங்க நிரத்தில் ஒரு ‘hendry sandoz’வாடச் வாங்கிவந்தார்.அது புத்தம் புதியதாக தோற்றமளித்தது.
 ஏதுண்ணா?’
நம்ம போண்டா’ (அது நாங்கள் வைத்த செல்லப் பேர்,எங்கள் பங்காளி,,,கொஞ்சம் வசதியானவர்,நான் படிக்கின்றேன் என்பதால் அவருக்கு என்மீது ஒரு ஆசை) கிட்ட சொன்னேண்டா,அவன் உடனே, ‘என் வாட்சைதான் கட்டிக்க சொல்லுண்ணா,நான் வேற வாங்கிக்கிறேன்என கழட்டி கொடுத்துட்டான்.சும்மா எல்லாம் வேண்டாம் எவ்வளவுன்னு சொல்லு?’
ஒரு நூறுரூபா கொடேண்ணாஎன சொன்னான்,
சரி என ஒரு நூறு ரூபா கொடுத்து வாங்கி வந்துட்டேண்டா!அப்போது ஒரு சவரன் விலை 100 ரூபாதான்!
(கைகடிகாரங்களும் பேனாக்கள் மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை ஒரே விலை.) அந்த கை கடிகாரத்தை ஆசையோடு கட்டிவந்தேன்.அதே ஆண்டில் தான் என் சின்ன அண்ணாவிற்கு கல்யாணம் ஆனது.
                 *******
              
                       18- கோயிலில்லா ஊரில் கோயில்

நான் 8-ம் வகுப்பு படிக்கும் போது,என் வகுப்பு தமிழ் ஆசிரியர்,
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்என சொன்னது என் மனதை பாதித்தது.
காரணம் எங்கள் ஊரில் நிலையான கட்டிட அமைப்புக் கொண்ட கோயில்கள் எதுவும் இல்லை! எல்லாம், 

வேப்பமர செல்லியம்மா’,  

முட்புதரில் குதிரை வாகனங்கள் கொண்ட,  பெரியாண்டவர்’, 

ஆலமரத்து எல்லையம்மா போன்ற வழிபாட்டுத் தலங்களே.

ஒரு நாள் என் வயது ஒத்த இரண்டு நண்பர்களிடம், ‘டேய், கோயிலில்லா ஊரில் குடியிருக்க கூடாதாண்டா,நம்ம ஊரில் கோயிலை இல்லையே ,நாம் என்ன செய்வது?’
அதில்,துரை எனும் நண்பர், ‘சரி நீ பட்சிகிற,உனக்கு தெரியுது,  நம்ம ஊருக்கு கோயில் வேணும், அவ்வளவுதானே’, உடனே இன்னொரு நண்பர் செல்லப்பனிடம் (இவர் இப்போது இல்லை, அந்த கோயில் கட்ட உறுதுணையாக நின்ற அந்த நண்பர் கோயில் கட்டிய ஒரிரு ஆண்டுகளில் இறந்து விட்டார்)

டேய்,இன்னிக்கே காட்டுக்கு போய் கோயில் கட்ட தேவையான மரங்களை வெட்டிகினு வர்ரோம், என்ன சொல்ற?’
சரிடா
மாலை நான் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்புமுன் பெரிய சவுக்கு மரங்களையும் தேவையான தூலங்களையும் வெட்டிக்கொண்டு வந்து விட்டனர்.சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் 16 அடிக்கு 10 அடி வாக்கில் பனை ஓலை வேயப்பட்ட பஜனைக் கோயில் தயார்.
சுற்றி மண் சுவர் எழுப்ப பட்டது.

ஊர் பெரியவர் திரு. ரங்கநாத நாயகர் அவர்கள் வந்து இதனை பார்வையிட்டார்.அவர் ஊரின் மிகப் பெரிய செல்வந்தர்.அவர் எங்களைப் பார்த்து,
என்னடா செய்யிறீங்க, பெரிய, பெரிய காரியமெல்லாம் செஞ்சிருக்கீங்க!இவர் ஆரணி பெருமாள் கோயிலுக்கு ஆண்டுதோறும் விமரிசையாக திருவிழா நடத்துவார்.ஒரு நாள் அவர்,

டேய் பசங்களா..! உங்களுக்கு இருக்கும் பக்தி, இந்த ஊர் ஜனங்களுக்கு இல்லையே..! என ஒரு வருத்தம் வெகு நாட்களாக எனக்கு இருந்து வந்தது,இப்போ உங்களைப் பார்த்ததும் அந்த கவலை நீங்கிவிட்டது.என்னிடம் கிராமப் பொது பணம் உள்ளது, அதை வைத்து ஒரு பெரிய கல் கட்டிடம் கட்டித் தருகிறேன்,நீங்கள் அந்த கோயிலை நிர்வகிப்பீர்களா?’ என்று எங்களைப் பார்த்து கேட்டார்.நாங்கள் மூவரும் ஒரே குரலில், ‘சரிங்கண்ணாஎன்றோம்.
               
                    19 நான் தான் கோயில் பூஜாரி

அடுத்த சில நாட்களில் கோயில் அடிக்கல் நாட்டப்பட்டு,6 மாதங்களில் பெருமாள் கோயில் வழிப்பாட்டுக்கு தாயார்.ஊர் மக்களே பூரித்துப் போனார்கள்.நான் தான் அந்த ஊரின் ஒரே படித்த பிள்ளை என்பதாலும்,படித்தவர்களுக்குத்தான் கோயிலை நிர்வகிக்கத் தெரியும் என்பதாலும் அந்த பெரியவர் என்னை கோயில் பூஜாரியாக,நியமித்தார்..

பூஜாரிக்கும் அர்ச்சகருக்கும் என்ன வேறுபாடு?

பூஜாரி என்பவர் கோயில் சிலைகளை காலை மாலை கழுவி மஞ்சள் பூசி குங்குமம் இட்டு பூக்கள் போட்டு கற்பூரம் கொளுத்தி தமிழில் மந்திரங்கள் சொல்லி கோயிலை மூடிவிட்டு வந்துவிடுவார்.கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு வாங்கமாட்டார்.பணத்தை உண்டியலில் போடச் சொல்வார்.கோயில் மூலம் தன் வருமானத்தை பெருக்கும் முயற்சியில் இறங்க மாட்டார்.
குடும்ப வருமானத்தை பெருக்க விவசாயம் போன்ற தொழிலில் ஈடுபடுவார்.

ஆனால் அரச்சகர் (பெரும்பாலும் பாரப்பனர்கள்) பிழைப்பே கோயில் வருமானம் தான்.புரியாத மந்திரங்களை சொல்லி மக்களை மயங்க வைப்பார்.
நான் பூஜாரியாக இருந்த காலத்தில் புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில் பஜனை செய்வோம்.எங்கண்ணா மிருதங்கம் வாசிப்பார், நான் தாளம் போடுவேன், இன்னொரு பங்காளி அண்ணா,ஆர்மோனியம் வாசிப்பார்.மற்ற நண்பர்கள் எல்லாம் எங்க அண்ணா பாடும் பக்தி பாடலை கூட சேர்ந்து பாடுவேம்.
படிப்பறிவும் எழுத்தறிவும் இல்லாத எங்கள் பெரிய அண்ணா கேள்வி ஞானம் கொண்டவர்.கூத்து ஆடுவதில் வல்லவர்.அர்ச்சுனன் தவசு,கர்னன் மோட்சம் போன்ற மகாபாரத கதாபாத்திரங்களில் ஊர் மக்களை வசமாக்கியவர்.கூத்து வாத்தியார் எழுதிக் கொடுத்த வசனம் மற்றும் பாடல் வரிகளை  

லட்சுமி அக்கா படிக்க (எங்க ஊரில் பெண்களில் அந்நாளில் இவர்மட்டுமே படித்தவர்,மூன்றாம் வகுப்பு வரைதான்,கொஞ்சம் விவரம் தெரிந்தவர்) அதை  அண்ணா மனனம் செய்துவிடுவார்.  பஜனைப் பாடல்களை சரளமாக பாடக்கூடியவர். அந்நாளில் சரவரிசை அல்லது சந்தப்பாடலான, ஆஞ்சநேயர் இலங்கையை எரித்து,சீதையை மீட்க ராமனுக்கு உதவும் கதையான,

ஏன் பள்ளி கொண்டீரய்யா  ஸ்ரி ரங்கநாதரே ஏன் பள்ளிக்கொண்டீரய்யா...அந்த இலங்கை வளர கரைய ஏன் பள்ளிக்கொண்டீரய்யா என்ன வென்று மொழிவன்...........வண்ணமெசோதை வனத்தையும் அழித்தான்..தசரதராமனுக்கு தைரியம் கொடுத்தான்...போன்ற வரிகளை 10 நிமிடங்கள் மூச்சு விடாமல் பாடும் சந்தப் பாடலை பாடும் ஆற்றல் பெற்றவர்.
இதை கேட்டதும் நான், ‘8-ம் வகுப்பு படித்து என்ன பயன் ?’  என நானே என்னை கேட்டுக் கொள்வேன்.
எங்கள் ஊரில் மட்டுமல்ல,சுற்று வட்டார பத்து கிராமங்களில், என்னை யார் எனக் கேட்டால்,என் அண்ணன் பேரான மோகனன் தம்பி என்று சொன்னால் மட்டுமே மற்றவர்களுக்கு தெரியும்.காரணம் 200 கிலோ எடை கொண்ட ஒரு   மாட்டை ஊருக்கு மத்தியில் இளைஞர்கள் பார்க்கும் வகையில்  கைகால் கட்டி தூக்கி காட்டியவர்.(பல்லால் கடித்து தூக்கினார் என சொல்பவரும் உண்டு) கம்பு சுழற்றி சிலம்பம் ஆடும் கலையில் வல்லவர்.

பல இளைஞர்களுக்கு சிலம்பம் ஆட கற்றுக்கொடுத்த வாத்தியார் இவர்.ஊரில் மட்டுமல்ல சுற்று வட்டார கிராமங்களில் வண்டி மாடு,நில பேரம் போன்ற சொத்துக்களை  விற்க வாங்க இவர் முன்னிலையில் தான் நடக்கும்.
வாரத்தின் சனி கிழமைகளில் அகண்டம் எடுத்துக் கொண்டு, பஜனை பாடிக் கொண்டு ஊரில் உள்ள வீடுகளுக்கு சென்று உண்டியல் பணம் திரட்டுவோம்.

ஆரணியிலிருக்கும் பெருமாள் கோயிலின் சப்பரத்தை தருவித்து பெரிய கிருஷ்ணன்-ராதை படத்தை அதில் வைத்து பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடுகளைப் பூட்டி  கொண்டு வீடு வீடாக இழுத்து வருவோம். வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள்,பஜனைகளுடன் ஊர்வலம் வருவோம்.ஊர்மக்களின்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திருவிழா முடிந்ததும்,மீதமுள்ள பணத்தை மாதாந்திர ஏலச்சீட்டு (ஒவ்வொரு முழு நிலவு நாளன்று)நடத்தி, அந்தபணத்தை சேகரித்து தேவைப்படுவோருக்கு
வட்டிக்கு மறு ஏலம் விட்டு நிறைய பணம் சேகரித்தோம்.

இதன் கணக்குகளை நான் தான் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி பராமரித்தேன். 1975 வரை ரூ.25 அல்லது 30 ஆயிரம் வரை நிதி சேர்த்தோம்,(அப்பொழுது ஒரு சவரன் விலை ரூ.180 அல்லது 200 அவ்வளவுதான்.அப்படி யெனில் அந்த பணத்தின்  இப்போதைய மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது ஒரு சவரன் விலை ரூ.25 ஆயிரம்.அந்நாளில் 120 சவரன் வாங்கியிருக்கலாம், அப்படியானால், 120*2300=2760,000,27 லட்சத்திற்கு மேல் ஆகிறது) நண்பர்களிடம் பணத்தை ஒப்படைத்து விட்டு,

1975-ல் வேலை தேடி நான் ஊரை விட்டு வந்துவிட்டேன்.அதன் பின் கிராம பெரியவர்கள், ‘வட்டி போட்டுத் தருகிறேன்என பங்கு போட்டு தின்று விட்டார்கள்.என கேள்விப்பட்டேன்.
1973 வரை நான் பூஜாரியாக செயல்பட்டேன்,அதன் பிறகு ஊரில் இரண்டு ஆண்டுகள் அதாவது 1975 வரை இருந்தேன்,ஆனால் கோயில் பூஜை வழிபாட்டிலிருந்து விலகிவிட்டேன்.ஏன் விலகினேன் என்பதை பின் வரும் பக்கங்களில் விவரிக்கின்றேன்.இன்றளவும் அந்த கோயில் ஊருக்கு நடுவே பொது வழிபாட்டுத்தலமாக இருந்து வருகின்றது .
                   
             20-அக்காவின் மரணம்

1967 என்று நினைக்கிறேன்.என் விதவை அக்கா இறந்து விட்டதாக தகவல் வந்தது,அப்போது எங்க அம்மா, ‘செத்து ஒழியட்டும்,இருந்தும் நல்ல பேர் எடுக்காமல் என் வயிற்றில் ஜனித்த சனி,போகட்டும். பெத்த பாவத்திற்கு நான் போய் அவளை எரித்து விட்டு தலை முழுகிவிட்டு வருகிறேன் என எங்க அம்மா மட்டும் புறப்பட்டார்கள் அம்மா ஏன் அக்காவை அப்படி திட்டினார்கள் என அப்போதைக்கு எனக்கு புரிந்து கொள்ளும் மன நிலை இல்லை.அப்பொழுதெல்லாம் என் மனதில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு வினா நிலை கொண்டிருக்கும்.
நம்மை அம்மாதான் பெத்து எடுத்தாங்க,அப்ப, அப்பாவைப்  பற்றி அம்மா ஏன் கவலை பட வேண்டும்?
அது போன்றே எங்க அக்காவை துன்புறுத்தும் மாமா எதற்கு?
நான் எங்க அம்மாவிடம் அடிக்கடி , ‘நம்ம கூட பொறந்த அக்காவுக்கு நாம் சோறு போட முடியாதாம்மா? அவன் கிட்ட போய் அக்கா அடிபட்டு அழுவதைப் பார்த்து மனசு கஷ்ட்டமா இருக்குமா!என்பேன்,அம்மா சொல்வாங்க,
ஒரு பொண்ணா பொறந்தா அவளை வளர்த்து இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுக்கறது தாண்டா அழகு!
அதுக்கு மேல் நான் அம்மாவை கேள்வி கேட்டதில்லை
       
                21- பள்ளியில் முதல் மாணவனாக வர ஆசை

1966-67,9-ம் வகுப்பிலிருந்து படிக்க ஆர்வம் கொண்டேன்.
....தினமும் பள்ளிக்கூடம் போகின்றேன்....... புள்ளை படிக்கிறான்.... அப்படின்னு அப்பா அம்மா நினைத்துக் கொண்டிருப்பார்கள் .குறைந்த பட்ச மதிப்பெண்கள் எடுத்து பாஸ்செய்வதால் எதிர்காலத்தில் நமக்கு அதனால் என் பிரயோஜனம்,அதிக மதிப்பெண் பெற்றால் தானே என்னை வேலையில் எடுத்துக் கொள்வார்கள்.....எனவே படிப்பது எனும் வைராக்கியம் கொண்டேன், 

அன்று நடக்கும் பாடங்களை அன்று இரவே மறுபடியும் புரட்டி பார்ப்பது.படித்ததை மனதில் பதிய வைத்துக்கொள்வது எனும் மனப்பயிற்சி வைராக்கியம் கொண்டேன்.அதே ஆண்டு தமிழ்நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு தோன்றியதின் விளைவாக இந்தி படிப்பது நிறுத்தப்பட்டது.
நான் இந்தியில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவேன்.6 மாதங்கள் தான் இந்தி படிக்க முடிந்தது.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி போய் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது.

எனக்குள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டேன்,அதாவது பரிட்சை எழுதவேண்டிய நாட்களில் முதல் பக்கத்தை நிறுத்தி நிதானமாக பொறுமையாக எழுதுவது....இப்படி ஒரு பக்கம் எழுத 30 நிமிடங்கள் ஆகும் .இரண்டு மணி நேரத்தில் எப்படி மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரமிருக்கும்? எனவே மற்ற வினாக்களுக்கு விடை எழுதுவதை படிக்க இயலா விட்டாலும் முதல் பக்க விடையைப்போல் எல்லாம் சரியாக இருக்கும் என ஆசிரியர்களின் மனோ நிலையை கணக்குப் போட்டு நான் எழுத ஆரம்பித்தேன்,இதே நிலைதான் நான் ஒவ்வொரு ஆண்டும் தோல்வியுறாமல் பரிட்சையில் வெற்றிபெற்ற காரணம்.!

9-ம் வகுப்பில் 3 மாதங்கள் தனிவகுப்பு பயின்றேன் ,அதன் பின்பு எந்த வகுப்பிற்கும் தனிப்பயிற்சிக்கு நான் போகவில்லை.சுய முயற்சியில் அன்றன்று நடக்கும் பாடங்களை வீட்டில் நினைவுபடுத்தி படிக்கலானேன்

கிராமத்தில் எங்கள் குடும்பத்தில் ஒருவராக பழகி எங்கள் சுக துக்கங்களில் பங்கு கொண்ட
திருமதி லட்சிமி அக்கா”,அவரின் ஒரே மகன் திரு வேணுகோபால் அவர்கள்,
(இவர் அம்பத்தூரில் உள்ள மாமா விட்டில் தங்கி 9-ம் வகுப்பு வரை படித்தவர்) நான் 9-ம் வகுப்பு முடிந்த உடன்,எனக்கு ஒரு ஆங்கிலம்-தமிழ் டிக்சனரியை வாங்கி கொடுத்தார் .அது இரண்டாயிரம் வார்த்தைகள் கொண்டது. அத்துணை ஆங்கில வார்த்தைகளையும் ஒரு நாளைக்கு 10 வார்த்தைகள் என ஒரே ஆண்டில் மனனம் செய்தேன்.

1967-68-ல்,நான் 10-ம் வகுப்பு படிக்கும் போது,ஆங்கில ஆசிரியர் எதாவது வார்த்தை சொல்லி அதற்கு பொருள் என்ன என்றால் சகமாணவர் இரண்டு மூன்று பேர் போட்டி போட்டுக்கொண்டு பொருள் கூறுமுன் நான் பொருள் கூறிவிடுவேன்.
அவர்களெல்லாம் கான்வென்ட்டில் படித்தவர்கள் அதனால் அவர்கள் பதில் சொல்ல முடிகிறது!என்றனர்.
என்னால் மட்டும் ஏன் முடியாது?நான்றாக படிக்க முடியாமல் நாம் ஏன் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்?....’சிந்திக்க ஆரம்பித்தேன்...!

No comments: