Thursday, October 31, 2019

இ.பி-3


                    7-ஆடி மாரி
ஆடிமாதம் என்றாலே எங்களுக் கெல்லாம் கொண்டாட்டம்தான். பக்கத்தில் (10 கி.மீ தொலைவு) பழம் பெரும் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.பெரியபாளையத்து அம்மன் என்று அதற்கு பெயர். ஆடிமாதம் மட்டுமல்ல அதற்கு பிறகு வரும் ஞாயிற்றுக் கிழமைகளும் விசேஷ நாட்கள் தான்.எங்க அம்மாவுக்கு ஆடிமாதம் வரும் ஓரு ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் சம்பவம் நடந்த வுடன்,4-ம் வாரம் குடும்பத்துடன் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு பிரார்த்தனைகளான குழந்தைகளுக்கு மொட்டை போடுதல் ,கண் வலி வந்தால் கண்ணைப் போன்ற உரு செலுத்துதல் ,அது போன்று பிற உறுப்புகளுக்கு கட்டி போன்ற பாதிப்புகள் வந்தால் அது
போன்ற வெல்ல உருக்களை காணிக்கையாக செலுத்துவது வாடிக்கை.

எங்களில் யாருக்காவது அம்மை தொற்று நோய் வந்தால்,அம்மன் சன்னதிக்கு வந்து, ‘வேப்பஞ்சேலை’ அணிந்து காணிக்கை செலுத்துகிறேன் என எங்கள் அம்மா பிரார்த்தனை செய்து கொள்வார்கள்(மாரியம்மன் பற்றிய புராண வரலாறு பின்வரும் பக்கங்களில் எழுதுகிறேன்.)
ஒரு சில ஆண்டுகள் எங்க அம்மா என் அக்கா,தம்பி,நான் ஆக நால்வரும் நடந்தே செல்வோம் (குறுக்கு வழியாக நடந்து வந்தால் 7 கி.மி இருக்கும்அந்த கோயிலின் விசேஷமே,சுற்று வட்டார மக்கள் குடும்பம் குடும்பமாக வண்டி,ட்ரக் போன்ற போக்குவரத்தை பயன்படுத்தி முதல் நாள் இரவே (சனிக்கிழமை) வந்து தங்கி விடுவார்கள்.வரும்போதே கோழி ஆடு போன்ற வற்றை கொண்டு வந்து பொங்கலிட்டு பலி கொடுப்பார்கள்.
                     
                           8-கிராமத்து கார்

அந்நாளில் கிராமங்களில் பெரும்பாலான விவசாய குடும்பங்களில் கட்டை வண்டி என ஒன்று இருக்கும்.இன்று கார் இருப்பது போல.
இன்று அதன் பயன்பாடு மாறி சிறியவகை டயர்வண்டி காணப்படுகின்றன.அந்த கட்டை வண்டி என்பது பெரிய வட்டவடிவ 6 அடி விட்டம் கொண்ட  மரச்சக்கரங்கள் இரண்டு கொண்டது.
இந்த மரச்சக்கரங்கள் என்பது ஒரு சக்கரத்திற்கு 6 வட்டைகள் கொண்டது,அதை வட்டத்திற்கு(குடம்) இரண்டு ஆரம் கொண்ட12 மரத்துண்டுகளை மத்திய குடத்தோடு இணைக்கப் பட்டிருக்கும். அதன் வட்டையை சுற்றி வலிமையான இரும்பு பட்டைகளை சுற்றிஇருப்பார்கள், இதற்கு வட்டு எனப்பெயர்.
மொத்த வண்டியையும் எதிர்கால் காலோடு நுகத்தடி கொண்டு இரண்டு காளைகளை பூட்டி மக்கள் அதில்
அமர்ந்து பயணிப்பர், இதை அந்த கால விவசாயிகளின் கார்என்றால் மிகையாகாது. பெண்கள் பேறு காலங்களில் மருத்துவமனை எடுத்துச்செல்ல இது ஒரு ஆம்புலன்சு போன்றது. விவசாய விளை பொருளை கடைத்தெருவுக்கு எடுத்துச் செல்லும் வேன் இதுதான்.

இப்பொழுது கோயம்பேட்டுக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்ல லாரிகளை பயன் படுத்துவது போல்,அந்நாளில் மாட்டு வண்டிகள் தான் கொத்தவால் சாவடிக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் ‘லாரி’.
ஒரு இரவு முழுவதும் பயணித்து விடியற்காலை கொத்தவால் சாவடிக்கு செல்வோம்.காலை 4 மணிக்கெல்லாம் கொண்டுபோன காய்கறிகளை விற்று விட்டு மதியம் அல்லது மாலை வீடுவந்து சேருவோம்.கிட்டத்தட்ட 24 மணிநேர பயணம் ஆகிவிடும்.ஒரு விவசாயிக்கு வண்டியையும் காளை மாடுகளையும் பராமரிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
வண்டியைப் பொறுத்த வரை அடிக்கடி இருசு(அச்சு) கடையாணி, குடம் ஆகியவற்றை கவனித்து வைக்க வேண்டும்.

ஊருக்கு பொதுவா கருமான்,தச்சன் ஆகிய கிராம தொழிலாளிகள், இந்த வண்டிகளை பராமரிப்பர், இவர்களுக்கு ஆண்டு தோரும் ‘மேறை’ எனப்படும் நெல் கதிர் கொண்ட நெற் கட்டுகளை வழங்குவர்.
100 அல்லது 200 குடும்பங்கள் கொண்ட ஒரு கிராமத்தில் இவர்களுக்கு ஆண்டுதோரும் 25 மூட்டை நெல்லாவது கிடைக்கும்,அதுதான் அவர்களின் வாழ்வாதாரம்.
இது தவிர அம்மட்டன்,வண்ணான்,வெட்டியான் போன்றோர் இரவு நேரத்தில் உணவுக்காக வருவார்கள்.இவர்களுக்கும் மேறை உண்டு,ஆனால் இவர்களெல்லாம் நாங்கள் இரவு உணவை உண்ட பின்தான் வரவேண்டும்,அதற்கு முன் வந்தால் திட்டுவார்கள்.அந்த திட்டுக்களையும் பொருத்துக் கொண்டு இரவு நேர சாப்பாட்டை வாங்கிச் செல்வார்கள், இன்றய நாளில் அது போன்ற பணிவான கிராம பணியாளர்களை காணமுடியாது.
அமட்டன் என்பவர் வீட்டில் உள்ள ஆண்களுக்கு மாதம் ஒரு முறை தலை மயிரை திருத்தம் செய்ய வேண்டும்.அது மட்டுமல்ல வீட்டில் விசேஷ காரியங்களுக்கு மேளம்,நாதெஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க வேண்டும்,அமட்டன் மனைவியான அமட்டச்சியை மருத்துவச்சி என அழைப்பர் காரணம்,வீட்டு பெண்கள் கர்பம் ஆனால் அவர்களுக்கு பிரசவம் பார்ப்பது இவர்களுடைய வேலைதான்.

வண்ணார் என்வர் வீட்டில் விழும் அழுக்குத்துணிகளை வெள்ளாவியில் வேகவைத்து வெளுத்து தருவார்கள். இவர்களுக்கும் ஆண்டு ஒரு முறை மேறைதான்.

வீட்டில் இறந்து போனவர்களை தாரை தப்பட்டைகளுடன் அடக்கம் செய்வது வெட்டியான் வேலை,அது மட்டுமல்ல இறந்து போன தகவலை எங்ஙெல்லாம் உறவினர் உள்ளனரோ அங்கு போய் சொல்லிவிட்டு வீடு வந்து சொல்லிவிட்டேன், ஆண்டைஎன வந்து தகவல் கொடுத்தால் மட்டுமே பிணத்தை அடக்கம் செய்வர்.

காளை மாடுகள் கழுத்தில் புண் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.காளை மாடுகளின் நான்கு கால்களுக்கும் குளம்புகளில் முறையாக ‘லாடம்’ தைக்க வேண்டும்.இதற்கு வேறு தொழிலாளி உண்டு.மாடுகளை வலிமையான மாடாக இருக்க அதன் உணவுகாளான,  வைக்கோல் (போர்),தவிடு மற்றும் புண்ணாக்கு எப்பொழுதும் வீட்டில் தயாராக இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் இந்த வண்டி மாடுகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அந்த கலாச்சாரம் அழிந்து விட்டது.

குடும்பத்தோடு பெரியபாளையம் செல்வதாக பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.அங்கே பழைமையான அம்மன் கோயில் உள்ளது!
அப்போது வண்டியை முந்தைய நாளே பழுது பார்த்து கூண்டு வண்டி அமைப்பார்கள்.ஆடி மாதம் என்பதால் மழை மற்றும் வெய்யிலிருந்து குழந்தைகளை பாதுக்காக்கும். மொத்தத்தில் இப்போதைய கார் போலத்தான்!. உறவினர் வீட்டுக்கு காது குத்தல்,சீமந்தம்,பூப்பெய்தல் விழா போன்றவற்றிற்கு குடும்பத்தில் உள்ள குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள்,சுமார் 50 கிமி தூரத்தில் பெண்ணை கட்டிக்கொடுக்க இருந்தாலும் மாட்டு வண்டிதான்.

எங்கள் உறவு முறைகள் எல்லாம் அதிக பட்சம்,50 கிமி தொலைவு தான்.பேருந்து அல்லது ரயில் வண்டி பிடித்து வெகு தூரம் சென்று சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்நாளில் பெரியபாளையம் கோயிலைச் சுற்றி பெரிய தூங்குமூஞ்சி காட்டுவாகை மரங்கள் இருக்கும் எங்கு பார்த்தாலும் நிழலாக இருக்கும்.அந்த மர நிழலில் தற்காலிக அடுப்புகளை அமைத்து, கட்டைகளை போட்டு கொளுத்தி கோழிக் கறிகளையும் ஆட்டுக்கறிகளையும் சமைத்து சுற்றுலா செல்பவர்கள் போல் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடும் காட்சிகளைப் பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக இருக்கும்.

ஆண்டுதோறும் கூடும் மக்கள் வெய்யிலாளி இனத்தை சார்ந்த ஒரே உறவின் முறை கொண்டவர்கள்.குடும்பம் குடும்பமாக தனித்தனி வட்டம் அமைத்துக் கொண்டு தத்தமது உறவுகளோடு சமைத்த உணவை உண்டு விட்டு பிரிந்து சென்று விடுவார்கள்.இவர்கள் கூடும் இடத்தில் கொடுக்கல் வாங்கல் உறவு முறைகளை பேசிக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் பேசினால் எதாவது ஒரு வகையில் தூரத்து உறவினர்களாகவே இருப்பர்கள்.
எல்லாம் மர நிழலில்தான் நடக்கும்.  ஒரு நேரத்தில் அதிக காற்று வீசியதால்,மரக் கிளைகள் முறிந்து விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டது.அதனால் மொத்த மரங்களையும் வெட்டி சாய்த்து விட்டார்கள்.
இப்பொழுது பெரியபாளையம் கோயில் ஒரு பொட்டல் காடாக காட்சி அளிக்கின்றது.
ஆடி மாதம் தொடர்ந்து 10 வாரங்கள்(சனி,ஞாயிறு) பெரிய கூட்டம் அலைமோதும்,கோயிலை அடையும் முன்பே எனக்கும் தம்பிக்கும் சுட சுட பாயாசம் வாங்கித் தருவார்கள்.அரிசி, கடலைப்பருப்பு,வெல்லம், ஏலக்காய் போட்ட அல்வா வாங்கித் தருவார்கள்,  பின் ஆளுக்கொரு பிகில்(விசில்), புல்லாங்குழல் ,கண்களில் மாட்டிக்கொள்ள கருப்பு மைக்கா ஒட்டிய கண்ணாடி வாங்கி அணிந்து கொள்வோம்.
இது போதும் எங்களுக்கு!.எங்கள் அக்காவுக்கு மண்ணால் ஆன சொப்புகள்(kitchen set) வாங்கி கொடுப்பார்கள்.
கோயிலை சுற்றி ஆரணி ஆறு மணல் காடாக காட்சி அளிக்கும்.குழந்தைகள் கண்டு களிக்க விதவிதமான ரங்க ராட்டினம்,மிருக காட்சி சாலை,கன்னிப்பெண் தலைகொண்ட பாம்பு ,கடல் வாழ் உயிரினங்களான,கடல் நாய்,கடல் சிங்கம்,ஒரு மிகப்பெரிய டம்ளர் வடிவத்தில் பெரிய மரச்சுவரை அமைத்து அதனுள்ளே மோட்டார் சைக்கிள் படுவேகமாக உருண்டு மேலே வருவதை காணம்போது மெய் சிலிர்க்க வைக்கும்.
நடந்து வருவதென்றால் எங்க அம்மா கட்டு சோறு மூட்டை கட்டிக் கொண்டு மர நிழலில் எங்களை சுற்றி உட்காரவைத்து விட்டு கையில் சாதத்தை உருண்டை பண்ணி கொடுப்பார்கள். மாலை வீடு திரும்பும்போது, காகித பைகளில் அரிசிப் பொறி,வெல்லம்                                         உடைத்த(பொட்டு) கடலை ,பேரீசம் பழம் கலந்த கலவையை வாங்கிக் கொடுப்பார்கள்.
வீடு வந்து சேரும் வரை அதைத் தின்று கொண்டும், விசிலடித்துக் கொண்டும்,புல்லாங்குழல் ஊதிக்கொண்டும் ஆடிக் கொண்டும், கத்திக்கொண்டும் வீடு வந்து சேருவோம்.

No comments: