6-மாட்டுவண்டியில் திருப்பதி யாத்திரை
முன்னதாக எங்கள் குடும்பத்தில் முதல் கல்யாணம் என் மூத்த
அக்கா திருமணம். 1956-ல் நடந்தது.ஒரே மகனான எங்க அத்தை மகனுக்கு மணமுடித்து வைத்தனர்,
இன்னொரு
அக்காவை 1958-ல் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வைதிலம்பேடு எனும் கிராமத்தில்
கொடுத்தார்கள். இரண்டு பெண்களை கட்டிக் கொடுத்ததில் எங்க அப்பா,அம்மாவுக்கு ஒரு
பெரிய விடுதலை அடைந்த மகிழ்ச்சி.பெரிய அக்காவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து
விட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.இதனால் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு
குடும்பத்துடன் வந்து எல்லாருக்கும் மொட்டை போட்டு வருவதாக பிரார்த்தனை.
1958-ல் மாட்டு வண்டிக்கு கூண்டுகட்டி,அதில் அரிசி
பருப்பு,அடுப்பெரிக்கும் கட்டைகள் போன்ற தட்டுமுட்டு சாமான்கள்
ஏற்றப்பட்டது.அம்மா,அக்கா 4பேர், அக்காவின் கைக் குழந்தை ,நான்,என் தம்பி
வண்டியில் ஏற்றப்பட்டோம். என் அப்பா,அண்ணா 2 பேர் நடந்தே வந்தார்கள்.வண்டி ஓட்ட
பக்கத்து வீட்டில் வசிக்கும் உடன் பிறவா அண்ணன் கணேச நாயகரின் தம்பி ஆறுமுக அண்ணாவை அழைத்துக் கொண்டோம். அந்நாளில் ‘டைட்டானிக்’ கப்பல் லண்டனை விட்டு
அமெரிக்கா சென்றது போல புறப்பட்டோம்.
வழியில் ஆரணி தெருக்களில் குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும் கையில் உண்டியல் ஏந்தி,மேள தாளத்தோடு ‘கோவிந்தா,
கோவிந்தா’ என கோஷம் போட்டுக்கொண்டு ஊர் வலம் வந்தோம்.எங்க அப்பா ஆரணியில் சுமார்
40 ஆண்டுகளாக வேலை பார்த்ததில் நிறைய மனிதர்கள் பழக்கம். அதனால் ஒரு கணிசமான தொகை உண்டியலில்
கிடைத்தது.தூக்க முடியாத பாரம்.உண்டியலில் எவ்வளவு பணம் வந்துள்ளது என எண்ண
வேண்டும் என்றனர்.ஒரு சிலர், ‘அப்படி எண்ணக்கூடாது.எவ்வளவு சேர்ந்ததோ அது கடவுளின்
பணம்,நாம் எண்ணி நாம் என்ன செய்ய போகிறோம்?,அதிலிருந்து
ஒரு சல்லிக்காசை நாம எடுக்க முடியுமா?’ என்றனர்.
‘எடுத்தா
என்ன ஆகும்?,
‘சும்மா
கெடடா,உண்டியல் துட்டை எடுத்தா சாமி கண்ண குத்திடும்’ அதற்கு
அப்புறம் நான் ஏன் பேசினேன்?
அப்போ எனக்கு 7 வயசு இருக்கும்,எங்க அக்கா குழந்தையை
நான் ஆசையோடு தூக்குவேன். குழந்தை பிறந்த இடம் காடுகள் சூழ்ந்த இடம் என்பதால் குழந்தைக்கு, ‘வனராணி’ என
பெயர் சூட்டுவதாக எங்க மாமா தெரிவித்தார்.
குழந்தையை நான் வாரி அணைப்பதைப் பார்த்து, எங்கள்
அக்காக்கள் எல்லாம், ‘பார் கட்டிக்கப்போற பொண்டாட்டியை எப்படி கொஞ்சராம் பார், ஆசையைப்பார்’
என சொல்லி கிண்டல் செய்வார்கள். நான் நாணிக் கோணிக் கொண்டு,
‘போ, இனிமே நான் இவளை தூக்க மாட்டேன்’ என குழந்தையை
அக்காவிடம் கொடுத்துவிடுவேன்.
வண்டி ஆரணியைக் கடந்து பெரியபாளையம் வழியாக
ஊத்துக்கோட்டை நாகலாபுரம் நகரி, புத்தூர், ரேணிகுண்டா என திருப்பதி சென்றடைய
இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. வழி நெடுக நானும் தம்பியும் காசு கேட்டால் எங்க அப்பா
எதுவும் சொல்லாமல் கொடுத்து விடுவார்கள்,மிட்டாய்
வாங்கி சாப்பிடத்தான்.
எங்க அம்மாவும் கொடுத்துவிடுவார்கள். எங்களுக்கு
ஆச்சரியம்.காசு கேட்டால் உதை விழும் என பயந்து,பயந்து
அப்பா அம்மாவை காசு கேட்காத காலமெல்லாம் போய் திருப்பதி செல்லும் வழியில் நாங்க
செல்லப் பிள்ளைகளாகி விட்டோம்.
கீழ் திருப்பதியில் எங்கள் ஆறுமுக அண்ணாவை வண்டியையும்
மாடுகளையும் பாராமரிக்க சொல்லி விட்டு நாங்கள் அனைவரும் நடந்தே ஏழுமலையை
கடந்தோம்.வாழ்க்கையில் நான் முதன் முதலா பார்த்த பிரமாண்டமான மலைகளும்
பள்ளத்தாக்குகளும் என்னை மலைக்க வைத்தன.
அதுவரை சமவெளிப் பிரதேசங்களில் ஓடி ஆடித்திரிந்த எனக்கு
வானம் நோக்கி(மலையேற்றம்) பிரவேசிக்கும் அனுபவம் புதுமையானது.ஆம்,திருப்பதி கீழ்
வாரத்தில்(மலையடி வாரம்)நின்று நான் பார்த்த மலை உச்சி காளி கோபுரம் என்னை மலைக்க
வைத்தன.அது எத்தனை படிகள் என நான் எண்ண வில்லை.ஆனால் நான் நடக்க நடக்க மேலே
போய்க்கொண்டே இருந்தேன்.கோபுரவாசலில் நின்று கீழ் நோக்கிப் பார்த்தேன்,ஓடும்
பேருந்துகள் எறும்புகள் ஊருவது போல் தெரிகிறது,அது இன்றும் என் மனதில் பதிந்த ஒரு வடு!
இன்று மீண்டும் அந்த இடம் போக ஆசைப்படுகிறேன், அது முற்பிறவி
சம்பவமாகிவிட்டது.
மேலே போய், கடவுளை ‘காண்’ என்றார்கள்.கடவுள் யாரிடமும் பேசுவது இல்லையாமே? பேசாத கடவுளிடம்
பின் ஏன் இந்த பாசம்?,பேசாத உறவினர்களை நாம் மதிப்பதே இல்லையே, இந்த ஆபரணங்கள்
அடர்ந்த கல்லை மட்டும் நாம் ஏன் நேசிக்க வேண்டும்? ஆபரணங்களை அடையவா?அபர்ன்னமான(நிர்வாண கல்) கல்லை நாம் மதிப்பதே இல்லை, ஆனால் ஆபரணங்கள்
அணிவிக்கபட்ட கல்லை ஆண்டவன் என்கிறோம்.! எப்படி?
எல்லாரும் மெட்டை போட்டுக்கொண்டோம்,ஏழுமலையான் சிலை
காண வரிசையில் நின்றோம்,நெடுநேரம் கடந்து அந்த அலங்கரிக்கட்ட சிலையை கண்டேன்,எல்லாரும்
கோவிந்தா...கோவிந்தா... என கோஷமிட்டனர்...சில நொடிகள் கூட காணமுடியாத அளவுக்கு
அங்கே இருக்கும் ஊழியர்கள் தள்ளி விட்டுக்கொண்டே இருந்தனர்.
பின் சென்ற வழியே திரும்பி மீண்டும் கீழே வந்தோம்.கீழ்
திருப்பதியில் எங்கள் வாகனம் இருக்கும் இடத்தை அடைந்து ,வீடு திரும்ப
பயணித்தோம்,
ஏழாம் நாள் வீடு வந்தோம்.வீடு திரும்பு முன் 100 ரூபாய்
மிச்சம் இருந்தது. அப்போதைய 100 ரூபாய் இப்போதைய 20 ஆயிரத்திற்கு சமம். ஆம்
அப்போதைய ஒரு சவரன் விலை,80 அல்லது 90 ரூபாய்தான்.
யாரோ சொன்னார்கள் என்பதற்காக அந்த மிச்ச 100 ரூபாயை
எப்படியாவது செலவு செய்து விடவேண்டும் என்பதற்காக,வரும் வழியில் உள்ள கோயில் உண்டியலில் போட்டுவிட்டார்
எங்கள் அப்பா.
அந்நாளில் திருப்பதி சென்று வருவது என்பது இந்நாளில் ‘கைலாசம்’ சென்று
வருவதற்கு சமம்.கிராமத்தில் பார்ப்பவர்கள் எல்லாம்,எங்கள் அம்மாவிடம்,
‘இதற்கொல்லாம் கொடுப்பனை வேண்டும் கண்ணம்மா!,எல்லாருக்கும் திருப்பதி போகும்
பாக்கியம் கிட்டுமா?’ என சொல்லும் போது எங்க அம்மா முகத்தில் அப்படி ஒரு
பரவசம் பார்க்கலாம்.
அதோடு விட்டார்களா, ‘கண்ணம்மா,ஒரு முறை திருப்பதி போய்
வந்து நிறுத்தக்கூடாது.மூன்று முறை போய் வரவேண்டும்,அதற்காக இப்போதே ஆண்டவனை
நினைச்சி ஒரு உண்டியலை கட்டு.’இன்னொரு உண்டியல் கட்டி விட்டார்கள்.
1966 ல் எங்கம்மா, அந்த உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு,
நான் என் தம்பி,மற்றும் கல்யாணமாகாத எங்கள் கடைசீ அக்கா நால்வரும் பேருந்தில்
பயணமானோம்.
மூன்றாவது முறை ஊர் நண்பர்களோடு எங்கம்மா திருப்பதி
போனாதாக எனக்கு நினைவு. ‘சுய சிந்தனை அற்ற வெய்யிலாளிகளை கடவுள் பெயரை சொல்லி
எத்தனை முறை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், வெய்யிலாளிகளும் ஏமாற தயாரக
இருப்பார்கள்.!’
திருப்பதி போய் வந்து விட்டதினாலே ஒரு மனிதன் மாடமாளிகை
கட்டி வாழ்ந்திட முடியாது என்பதற்கு எங்கள் திருப்பதி விஜயம் ஒரு பாடம்.
1961 வரை கள்ளூர் நினைவலைகள் நீடித்தது! எங்க பெரிய
அண்ணா கல்யாணம் முடியும் வரைதான் நான் கிராமத்தில் இருந்தேன்,பின் 4 (1961-62)மற்றும்
5-ம் 1962-63)வகுப்பு
படிக்க நான் பூந்தமல்லி அருகே உள்ள எங்க பெரிய அக்கா வசிக்கும் பாரிவாக்கம் எனும்
கிராமத்திற்கு வந்து விட்டேன்.
No comments:
Post a Comment